Tag: Tamilnadu

  • Worship of the ancestral deity: On which days does worshiping yield the best results?

    சில குடும்பங்கள் தொடர்ச்சியான சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றன. இவர்கள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று முறையாக வழிபாடு செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணரலாம்.

    எனவே, முடிந்தவரை மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. ஆனால், சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் குலதெய்வத்தை மனதில் நினைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

    எல்லா நாட்களும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்றவை என்றாலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மிகவும் உகந்தவை என ஆன்மிக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நாட்களில் கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு பிடித்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

    அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செல்ல முடியாதவர்கள், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.

    குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்பவும் குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்தவை:

    • சிவபெருமான் அல்லது முனீஸ்வரர் போன்ற சிவனுடன் தொடர்புடைய தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், திங்கட்கிழமை வழிபாடு மிகவும் பொருத்தமானது.

    • முருகன் தொடர்புடைய தெய்வங்களாக இருந்தால், செவ்வாய்க்கிழமை வழிபடுவது சிறந்தது.

    • பெருமாள் தொடர்புடைய குலதெய்வங்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகள் உகந்தவை.

    • அம்பாள் போன்ற தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாடு மிகுந்த ஆன்மிக அருளை வழங்கும்.

    குலதெய்வ வழிபாட்டின் மூலம் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் தடைகளைத் தாண்டுவதற்கான ஆற்றல் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

     

  • Thai Amavasya: Devotees Take a Holy Dip in Rivers!

    ல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரக்கூடிய அமாவாசை, ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. முன்னோர்களின் சாபங்கள், தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழக்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது. இந்த நாளன்று புனித நதிகளில் நீராடுவதும், தானங்கள் அளிப்பதும், வழிபாடு செய்வதும் மிக சிறந்த பலன்களை தரும் என்பது மக்களின் நம்பிக்கை.

    அதன்படி தை அமாவாசையான இன்று கடல் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சூரிய உதயம் தொடங்கியதும் புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரை புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடைபெற்றன. இதேபோல கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து வடக்கு நந்தவனத்தில் பக்தர்களுக்கு பால், பிஸ்கட், குடிநீர் வழங்கினர். ராமநாதசுவாமி கோயில் தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களிலும் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    கன்னியாகுமரியில் புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலில் புனித நீராடி, கடற்கரையில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களின் பெயர்களை கூறி புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு வைத்து வழிபட்டனர். நாகை மாவட்டத்தில் புதிய கடற்கரை, வேளாங்கண்ணி காமேஸ்வரம் கடற்கரை, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய குளக்கரை, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் திரளான மக்கள் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கல்லணை, பாபநாசம், கும்பகோணத்தில் உள்ள காவிரி படித்துறை, கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி காவிரி மற்றும் அமராவதி ஆறுகள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு மக்கள் சென்று நீராடினர். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

  • Tamilnadu Iyappan Temples

    திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கே 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்படுகின்றன.

    * சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

    * சென்னை  அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

    * சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

    * திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    * சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணியை பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.

    * கையில் பூச்செண்டுடனும் இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

    * கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

    * சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும் ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.

    * சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

    * விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

    * திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன் விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும் விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள்.

    * பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

    * ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள பிடவூரில் தரிசிக்கலாம்.

    * தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.

    * திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

    * சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * நெல்லை, பாளையங்கோட்டை, சாந்தி நகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சி தரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.

    * தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.