Tag: Special

  • Vinayakar Chadurthi Special Pongal

    தேவையான பொருட்கள்:
    பச்சரிசி –  1 கப்
    பாசிப் பருப்பு  – 50 கிராம்
    முந்திரிப் பருப்பு – 30 கிராம்
    காய்ந்த திராட்சை  – 30 கிராம்
    சுக்கு பொடி –  சிறிதளவு
    ஏலக்காய் –  6
    சிறிய தேங்காய் –  1
    நெய் –  200 கிராம்
    கருப்பட்டி  – 600 கிராம்
    தண்ணீர் – தேவைக்கேற்ப

    செய்முறை:   

    முதலில் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னர் குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு 3 மூன்று பங்கு தண்ணீர் விட்டு பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை போட்டு சாதமாக குழையவிடவேண்டும்.  

    தொடர்ந்து குக்கரில் பிரஷர் போனதும் குக்கரை திறந்து அதில் தூளாக்கி வைத்துள்ள கருப்பட்டியை போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து ஒன்றாக திரண்டதும்,  வாணலியில் சிறிது நெய்யைவிட்டு  அதில் முந்திரிப் பருப்பு, திராட்சைப் பழம், துருவிய தேங்காயைப் போட்டு வறுக்க வேண்டும்.  

    தேங்காய் பொன்னிறமாக வதங்கிய பின் கலவையை குக்கரில் போட்டு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி, மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார். 
     

  • Deepam special

    இறைவனோடு நம்மை நேரடியாக சம்பந்தப்படுத்துவது தீப வழிபாடுதான்.

    குளித்து சுகாதாரமான ஆடை அணிந்து தலையினை பிரித்து விடாமல் பின்னியோ, முடிந்தோ வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    காலையில் 4.30-6 மணிக்கும் மாலையில் 5.30 – 6 மணிக்கும் பொதுவில் விளக்கேற்ற உகந்த நேரங்கள்.

    மகா கணபதிக்கு தேங்காய் எண்ணெயும், பெருமாளுக்கு நல்லெண்ணையும், சிவபிரானுக்கு இலுப்ப எண்ணெயும், நெய்யும், முருகனுக்கு நெய்யும், சந்தன எண்ணெய்யும் உகந்தது.

    அன்றாடம் பூஜை அறையில் தரையை சுத்தம் செய்து அரிசி மாவில் கோலம் இட்டு செம்பு தட்டுகளின் மேல் விளக்கினை வைத்து குங்குமம் இட்டு விளக்கேற்றி பூ வைத்து வழிபட வேண்டும்.

    விளக்கினை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி அன்று சுத்தம் செய்யலாம். செவ்வாய், புதன், வெள்ளி அன்று சுத்தம் செய்யக்கூடாது.

    சீயக்காய், வெந்தயம், பயத்தம்பருப்பு, பச்சரிசி, எலுமிச்சை தோல், அரைத்த மாவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறு பூசலாம். தேங்காய் நார் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான ப்ரத்யேக துணி கொண்டு நன்கு துடைக்க வேண்டும்.

    விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவது. இது விளையாட்டு சமாச்சாரமல்ல. முழு கவனத்தோடு செய்யுங்கள். அக்னிக்கு என்று ஒரு மாபெரும் சக்தி உண்டு. ஒவ்வொரு மனிதனுள்ளும் அக்னி இருக்கின்றது. அந்த உள் ஒளியும், தீப ஒளியும் உங்கள் கவனத்தால் ஒன்று பட வேண்டும்.
     

  • Kaligambal Koil Special

    காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.

    ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.

    தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.

    சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.

    காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.

    காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.

    காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.

    ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.

    காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

    காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.

    அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.

    காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.

    காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் “சொர்ணபுரி” என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.

    காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.

    இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.

    காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.

    இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.

    திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.

    இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.

    சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.

    இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது.

    இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி.

    காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.

    “உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.

    இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.

    இங்கு குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     

  • Navarathiri Special

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம். இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.

    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.

    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.

    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.

    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.
     

  • Vinayakar Chadurthi Special

    ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம். 

    கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதி என்று சொல்கின்றோம். எனவே, அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.

    எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவேதான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.

    அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் ஆவணி மாதம். அந்த திருநாள்ஆவணி மாதம் 20ம் தேதி திங்கள் கிழமை (05.09.2016) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

    வீட்டிலும் சிலை வைத்து வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
     

  • Bogi Festival Special

    பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழையபொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.

    பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துதமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழையபொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

    பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான்  பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக  மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.

    போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றைதீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என நம்பப்படுகிறது. பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும்.

    போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

    பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிபண்டிகை அமைந்திருக்கும்.