Tag: Siruvapuri

  • Siruvapuri murugan temple aadi kiruthigai

    சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் என்பது அலை மோதும்.

    ஆடி கிருத்திகை தினமான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து வழிபட்டனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பால் குடங்களை சுமந்தபடி பெண்கள் பாதயாத்திரையாக சிறுவாபுரி முருகன் கோவிலை வந்தடைந்தனர். காவடிகளை சுமந்த படியும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    ஆலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பால் அங்குள்ள முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • Siruvapuri murugan temple

    சென்னைக்கு வடமேற்கே சென்னை,கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரி (சின்னம்பேடு) பாலசுப்ரமணிய பெருமான் ஆலயம் உள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் ராமனின் குதிரையை கட்டிப்போட்டனர். ராமனே நேரில் வந்து சிறுவர்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றதாக ராமாயணம் கூறுகிறது. இப்படி ராமனிடம் லவனும் குசனும் சண்டை செய்த இடமே சிறுவாபுரி என்பது வரலாறு.

    சிறுவாபுரி கோயில்களின் பெருமைகள் பல. அதில் முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் இருந்து அமுதுண்டது, தேவேந்திர பட்டணம் கிடைத்தது, இந்திரனுக்கு பதவி உயர்வு கிடைத் தது, லவன், குசன் ராமனின் அசுவத்தை கட்டிய இடம், மரகதப் பச்சை கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த தலம் என 12 சிறப்பம்சங்களை கொண்டது இத்திருத்தலம்.

    சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள் வேண்டியபடி வீடு, வாகனம், தொழில், திருமணம் என குடும்பம் சிறக்க சிங்காரவேலன் அருள்பாலிக்கிறார். 6 வாரங்களுக்கு செவ்வாய் தோறும் சிறுவாபுரி முருகனை வணங்கினால் நினைத்த காரியம் ஈடேறுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

    சென்னை-நெல்லூர் சாலையில் அமைந்துள்ள திருத்தலம் ‘சிறுவாபுரி’. இத்தலத்தில் உள்ள முருகன் கோயிலில் முருகப்பெருமான் வள்ளியம்மையுடன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முருகன் திருத்தலங்கள் யாவற்றிலும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும் இது.

  • Siruvapuri murugan

    சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லைஉங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன். 

    ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

    சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து  3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.

    சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

    பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

    ஐந்து நிலைகளைக்  கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

     பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.