Tag: Shekar Babu

  • Asia’s Tallest Lord Murugan Statue at Maruthamalai Temple

    மிழ்க் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும் ஆங்காங்கே முருகனுக்கு பல உயரமான சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், மலேசியாவில்தான் முதல் முறையாக மிகப்பெரிய முருகர் சிலை அமைக்கப்பட்டது. இதனைக் காண பக்தர்கள் பலரும் அங்கே சென்று வருவார்கள். மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காகவே இந்த முருகர் சிலை இருந்தது.

    தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் ஆலயத்தில் உள்ள முருகன் சிலை தான் உயரமான சிலையாக கருதப்படுகிறது. 146 அடி உயரம் கொண்ட இந்த முருகன் சிலை 2022 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
    மலேசியாவில் இருக்கும் முருகன் 140 அடி உயரம் கொண்டது. தற்போது முத்துமலையில் இருக்கும் முருகன் சிலை தான், இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில், மேற்கூறிய சிலையை விட அதிக உயரத்தில், அதாவது 160 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
     
    இது தொடர்பாக அவர் கூறுகையில், "மருதமலை முருகன் கோவிலில் ஆசியாவிலேயே மிக உயரமான 160 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முழுவதும் கல்லால் ஆன இந்த சிலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. மேலும், கோவை வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்கப்பட உள்ளனர். இங்கு மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.