Tag: Recipies

  • Krishna Jayanthi Palagarangal

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

    ரவா லட்டு….

    கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்…

    ரவை – ஒரு கப்

    நெய் – 4 டீ ஸ்பூன்

    சர்க்கரை – அரை கப்

    தேங்காய் துருவல் – அரை கப்

    ஏலக்காய் பொடி செய்தது – கால் ஸ்பூன்

    நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி – 10

    சூடான பசும்பால் – அரை கப்

    செய்முறை…

    அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

    அக்கார அடிசல்….

    நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்…

    பாசுமதி அரிசி – 1 கப்

    பாசிப்பருப்பு – ½ கப்

    பால் – 750 மிலி

    வெல்லம் – 2 கப் முந்திரி,

    திராட்சை – கால் கப்

    ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்

    நெய் – 50 கிராம்

    பச்சைக் கற்பூரம் – சிறிதளவு 

    செய்முறை…

    வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். 

    லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

    வெல்லம் பால் கொழுக்கட்டை

    வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்…

    இட்லி அரிசி – 1 கப்

    எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

    காய்ச்சிய பால் – 1 கப்

    வெல்லம் – 1 கப்

    ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    சுக்குப் பொடி – 1/2 டீ ஸ்பூன்

    அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் – ஒரு கப் வெல்லப்பாகு

    செய்முறை…

     வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். 

    அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். 

    அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் கோவா ….

    பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

    தேவையான பொருட்கள்…

    மில்க் மெய்டு – 500 கி

    பால் – 150 மி.லி

    தயிர் – 125 கி

    நெய் – 100 கி

    செய்முறை…

     முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். 

    அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

  • Depavali Recipies

    தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.

    அதிரசம்

    தேவையான பொருட்கள்….
    2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

    செய்முறை ….

    அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

    சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.

    சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
    அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.

    மொறு மொறு கை முறுக்கு

    முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 3 கப், உளுத்தம் மாவு – கால் கப், டால்டா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் – அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

    முறுக்கு செய்முறை

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
    ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.

    முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
    சுவையான கை முறுக்கு ரெடி.

    பாசிப்பருப்பு நெய் உருண்டை….

    தேவையான பொருட்கள்….

    பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை – 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்

    நெய் உருண்டை செய்முறை

    பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

    அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.

    வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.