Tag: puranam

  • Benefits and miraculous effects of Karthigai Deepam!

    கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவமிருந்த அம்பிகை, மகிஷாசுரனுடன் போர் புரிந்தபோது, தவறுதலாக ஒரு சிவலிங்கத்தை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்குவதற்காக கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்றி விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் தவறாமல் கடைப்பிடித்த நாரத முனிவர், அதன் பலனாக சப்தரிஷிகளையும் மேம்பட்ட நிலையில் இருப்பதற்கு அருளைப் பெற்றார்.

    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து, மூன்று முறஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே!
    என்ற மந்திரத்தைச் சொல்வது மிகுந்த விசேஷபலனை தரும்.

    திருக்கார்த்திகை நாளில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

    கார்த்திகை திருநாளில், நெல் பொரியுடன் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை தயாரித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.
    வெள்ளை நிறப் பொரி திருநீறு பூசிய சிவனை குறிக்கிறது; தேங்காய் துருவல் கொடைத் தன்மையின் அடையாளமான மாவலியை குறிக்கிறது; வெல்லம் பக்தர்களின் மனப்பக்தியைச் சுட்டிக்காட்டுகிறது.

    ஆத்மார்த்தமான பக்தியால் மகிழும் சிவன், நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால், இந்நாளில் பெரிய நெற்பொரி உருண்டைகளும் அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

  • Karaikaal amayar puranam – Part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கைப்பிடித்த காரிகையைக் 
    கடவுள் அம்சம் என உணர்ந்து கொண்ட பரமதத்தன் 
    ஏதேனும் 
    சாக்கு போக்கு சொல்லி புனிதவதியிடமிருந்து அன்றாடம் விலக ஆரம்பித்தான். 

    நீண்டநாள் 
    விலகவும் திட்டமிட்டான். 

    'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழி அவன் நினைவுக்கு வந்தது.

    வணிகத்தைப் பெருக்குவதாக உறவினர்களிடம் சொல்லி பெரும்பொருள் ஈட்டு வர விரும்புவதாக 
    உறுதிபடக் கூறி அவர்களிடம் ஆசி பெற்றான்.

    புனிதவதியார் கூட மறுப்பேதும் சொல்லாமல் கண்ணீரோடும் 
    இனிமேலாவது 
    நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடும் 
    மீறி வந்த விம்மலோடும் அனுப்பிவைத்தார்.

    துறைமுகத்தில் 
    மரக்கலம் தயாராக இருந்தது.

    மனதார 
    குலதெய்வமாய் கருதிய 
    புனிதவதியாரை வணங்கிவிட்டு 
    கடல் வணிகர்கள் வழக்கமாக வணங்கும் வருண பகவானை துதித்து விட்டு 
    கடல் பயணம் மேற்கொண்டான் பரமதத்தன்.

    கணவன் போன 
    திசை வணங்கியபடி காத்திருந்தார் 
    கற்பு நெறியுடன் புனிதவதியார்.

    கணவன் திரும்ப வந்து கை பிடிப்பான்.
    அவன் மனதும் 
    தம்மிருவர் வாழ்வும் மாறும் என்ற 
    பெருத்த நம்பிக்கையோடு
    சிவ வழிபாட்டில் 
    பெருநேரம் கழித்தார்
    பெருமாட்டியார்.

    தினமும் 
    காலையில் கதிரவன் கடலில் எழுந்தான். மாலையில் மறைந்தான். மாலை முடிந்து 
    இரவு வந்தது.
    நிலவு வந்தது. 
    வளர்ந்தது. 
    தேய்ந்தது. 
    மறைந்தது.

    தீதறியா 
    புனிதவதியார் 
    கடலைப் பார்த்தபடி கடவுளைத் தியானத்தபடி கப்பல் வரும் 
    திசை நோக்கிக் காத்திருந்தார்.

    பரமதத்தன் 
    வரவே இல்லை.

    வெகு காலத்திற்குப் பின்-
    பின்னொரு நாள்
    பாண்டிய நாட்டில் பரமதத்தன் வசிப்பதாக காரைக்காலுக்கு 
    ஒரு வணிகத் 
    தகவல் வந்தது.

    ஊர்ஜிதம் செய்யப் போன உறவினர்கள் 
    பெற்ற செய்தி அதிர்ச்சியாய் இருந்தது.

    பெரும் பொருள் ஈட்டி தாயகம் திரும்பிய பரமதத்தன் 
    காரைக்கால் திரும்புவதைத் தவிர்த்து பாண்டிய நாடு சென்றிருக்கிறான்.

    அங்கு 
    வசதியோடு வணிகம் மேற்கொண்ட அவனுக்கு வணிகர் ஒருவர் 
    பெண் தந்து மணம் முடித்திருக்கிறார்.

    அந்த இருமனம் இணைந்த திருமணத்தின் பயனாக 
    ஓர் அழகுக் குழந்தை பிறந்திருக்கிறாள்.

    அக்குழந்தைக்கு பரமதத்தன் இட்ட பெயர் 'புனிதவதி'.

    இத்தகவல்கள் காரைக்காலுக்கு வருவதற்கு முன்னரே உற்றார் உறவினரோடு சிவிகை ஏறி 
    பாண்டிய நாடு சென்று கணவனைக் 
    கைப்பிடித்து 
    அழைத்து வர கிளம்பியிருந்தார் புனிதவதியார்.

    புனிதவதியார் 
    பாண்டியநாடு 
    வரும் தகவல் பரமதத்தனுக்கு முன்னதாகவே
    தெரிய வந்தது. 

    இளம் மனைவியையும் தன் பெண் மகவையும் அழைத்துக்கொண்டு 
    நகர எல்லைக்கு வந்து காத்திருந்தான் 
    பரமதத்தன்.

    புனிதவதியாரைப் பார்த்ததும் மூவரும் வணங்கினர்.

    "உமது அருளாலே தான் இத்தனை நாள் வாழ்கிறேன்.

    இந்த பெண் குழந்தைக்கு உமது பெயரையே வைத்துள்ளேன்.

    தாங்கள் தான் என் குலச்சாமி"

    காலில் விழுந்து கதறினான்.

    கணவன் 
    காலடி விழுந்து கதறுவதைக் கண்டு அஞ்சி பயந்து புனிதவதியார் 
    பூங்கொடி போல் தத்தளித்தார்.

    ஒன்றும் புரியாத சுற்றத்தார் வியந்து பரமதத்தனைப் பார்த்தனர்.

    "ஏன் மனைவியின் 
    காலில் விழுகிறாய் ?" ஆச்சரியத்தோடு கேட்டனர்.

    "இவர் 
    மானிடப் பிறவி அல்ல. தெய்வப் பிறவி. 
    நற்பெரும் தெய்வம். 

    இதை அறிந்து தான் விலகி வந்தேன்.

    என் குழந்தைக்கு 
    இவர் பெயரைத் தான் சூட்டியுள்ளேன்.

    ஆகையால் தான்
    நான் இத்தெய்வத்தின்
    பொற்பாதங்களை வணங்கினேன்.

    நீங்கள் அனைவரும் வணங்குங்கள்.
    நிச்சயம்
    நல்லது நடக்கும்"
    என்று பரமதத்தன் 
    பக்திப் பரவசத்தோடு பகர உறவினர்கள் 
    திகைத்துப் போயினர்.

    பின் 
    நடந்ததையெல்லாம் கதைபோலச் சொன்னான் பரமதத்தன்.

    அதேநேரம் நடந்ததையெல்லாம் கவனித்திருந்த புனிதவதியார் 
    கண்மூடி 
    தியானத்தில் ஆழ்ந்தார்.

    ஈசனிடம் 
    நேரடியாக 
    கோரிக்கை வைத்தார்.

    "தேவாதி தேவனே …! 
    என் கணவருக்கு 
    இப்படி ஓர் எண்ணம் வந்திருக்கிறது.

    எல்லாம் உன் செயல்.

     இத்தனை நாள் அவருக்காகவே
    உடல் வளர்த்தேன். வனப்புடன் இருந்தேன்.

    இப்போது அவரது உள்ளக்கிடக்கை வெளிப்படை 
    ஆகிவிட்டது.
    நானும் பூரணமாகப் புரிந்து கொண்டேன்.

    இனி எதற்கு எனக்கு அழகுக் கோலம் ?
    ஈர்க்கும் வனப்பு 
    எனக்கெதற்கு ? 

    என் 
    தசைகளைச் சுருக்கி 
    உன் 
    பூதகணங்களைப் போல் பேய்கணம் போல் 
    ஆக்கி விடு.

    பூத வடிவை மாற்றி 
    பேய் வடிவு தந்துவிடு."

    உணர்ச்சி பொங்க வேண்டி நின்றார்.

    புனிதவதியாரின் வேண்டுதலை 
    எப்போதும் 
    செவிமடுக்கும் செஞ்சடையன் 
    உடனே 
    திருவருள் புரிந்தார்.

    புனிதவதியார் பெண்மைக்கும் அழகிற்கும் ஆதாரமான ஊன் சதை வனப்பை உதறிவிட்டு வெறும் எலும்புக் கூடாய் 
    பேயாய் மாறி நின்றார்.

    ஆம் ….
    மயிலினம் தன் 
    சிறகுகளை உதிர்ப்பது போல்
    இந்த அழகு மயில்
    சதைகளை தசைகளை உதிர்த்தது.

    இதைக்கண்ட உறவினர் "பேய்' என அலறியவாறே அஞ்சி ஓடினர்.

    ஆனால் 
    பரமதத்தன் 
    மனம் தெளிந்து 
    பயம் விலகி 
    வணங்கி நின்றான்.

    அக்கணம் 
    விண்ணவரும் மண்ணவரும் 
    தோன்றி வணங்கினர்.

    வானம் 
    மலர்மழை பொழிந்தது.

    தேவ துந்துபிகள் தேவகானம் இசைத்தன.

    தேவர்களும் முனிவர்களும் 
    தம்மை மறந்து 
    ஆரவாரம் செய்தனர்.

    சிவகணங்கள் 
    ஆனந்தக் கூத்தாடின.

    இவற்றைக் கவனித்த உறவினர்கள் 
    பயம் நீங்கி 
    புனிதவதியாரைச்
    சூழ்ந்து வணங்கினர்.

    பேய்கணமாய் மாறிய புனிதவதியாருக்கு  இறையருளால் 
    உடல் வனப்பு 
    மாறினாலும் 
    குரல் இனிமையும் 
    தமிழ் புலமையும் 
    குன்றாதிருந்தது.

    கண்மூடிக் கனிந்துருகி "புவியாளும் இறைவா….
    உன்னுடைய அழகான திருவடிகளைப் போற்றும் நல்ல 
    சிவ பூதகணங்களில் ஒன்றானேன்."
    என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு…. 

    அற்புதத் திருவந்தாதியையும் இரட்டை மணிமாலை யையும் 
    பாடி அருளினார்.

    இதனைத் தொடர்ந்தே இறைவன் 
    புனிதவதியார் பிறப்பதற்கு முன்பே இரண்டாவது பெயர் என 
    குறித்து வைத்திருந்த 'காரைக்கால் அம்மையார்' என்ற புனித 
    பெயரைப் பெற்றார்.

    பாண்டிய எல்லையிலிருந்து 
    பேய் வடிவோடு திருக்கயிலாயம் 
    பயணப்பட விருப்பப்பட்டார் காரைக்கால் அம்மையார்.

    வழியில் 
    பார்த்தவர் எல்லாம் பயந்து ஓடினர். 

    காரைக்கால் அம்மை கவலை கொள்ளவில்லை. கயிலை மன்னன் திருநாமத்தை உச்சரித்தபடி 
    பயணம் தொடர்ந்தார்.

    'தன்னை யார் 
    அறிந்தால் என்ன ?
    என்ன பயன் ?
    இறைவன் 
    அறிவானாகில் போதும்' என எண்ணியபடி 
    எதற்கும் கலங்காது 
    பல நாள் பயணத்தில் கயிலாய மலையை அடைந்தார்.

    திருக்கயிலாய மண்ணை காலால் மிதிப்பது தவறு என கருதிய 
    காரைக்கால் அம்மையார் கயிலைநாதனை வேண்டியபடி 
    தலையால் நடக்கலானார்.

    வெள்ளி மலையை தலையால் ஏறினார் சிவன் அருளாலே 
    அவன் தாள் 
    வணங்கியபடியே.

    'திருவருள் 
    துணை செய்தால் தான்  சிவத்தை அடைய முடியும்' என்ற வேதவாக்கு காரைக்கால் அம்மையார் பயணத்தில் உண்மையானது .

    உலகமாதா 
    உமாதேவியார் 
    ஒரு பெண்மணி 
    பேய் வடிவில் 
    தலையால் 
    தம்மை நோக்கி வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு உமையொருபாகனிடம் சுட்டிக் காட்டினார்.

    முக்காலமும் உணர்ந்த
    முக்கண்ணர் புன்னகைத்தபடி

    "வருபவர் நமது அன்பிற்குரியவர். 

    வேண்டி 
    இவ்வுருவம் பெற்றவர்.

    என் அன்பு குழந்தை."
    என்று உமையிடம் சொன்னார்.

    உமாதேவியார் அம்மையாரின் 
    அன்பை வியந்து பாராட்டினார்.

    காரைக்கால் அம்மையார் அருகில் வந்ததும் "அம்மையே…!" என்று அன்போடு அழைத்தார் 
    அடியார்க்கினியர்.

    காரைக்கால் அம்மையார் "அப்பா….!" என கூறியவாறு எம்பெருமானின் 
    தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

    "இங்கு நம்மிடம் வேண்டுவது யாது ?
    நாம்  தரத் 
    தயாராக உள்ளோம்." என்றார் கயிலைப்பெருமான் எல்லை இல்லா கருணையோடு.

    நான்கு வரங்கள் கேட்டார் நற்றமிழ் அன்னையார்.

    "உம்மீது 
    இன்ப அன்பு வேண்டும்.

    என்றென்றும் இறவாத பிறவாமை வேண்டும்.

    மீண்டும் பிறப்பு உண்டேல் உம்மை என்றும் மறவாது இருக்க வேண்டும்.

    நீவீர் ஆனந்த நடனம் ஆடும் போது அடியேன் உன் திருவடியின் கீழ் மகிழ்ந்து பாடிய வண்ணம்  இருக்க வேண்டும்"

    என்று கனிந்துருகி கண்ணீர் மல்கக் கேட்டார் காரைக்கால் அம்மையார்.

    "அம்மையே…! தென்திசையில் பழையனூர் திருவாலங்காட்டில்
    நாம் நடனம் ஆடுவோம்.

    அங்கு 
    நீ சென்று 
    என் நடனம் கண்டு ஆனந்தப்பட்டு 
    எம்மை எப்போதும் பாடிக்கொண்டிரு."
    ஆசி தந்தார் 
    ஆதி சிவனார்.

    அதன்படி 
    திருவாலங்காடு தலத்திற்குத்
    தலையாலே 
    வைராக்கியத்தோடு நடந்து வந்தார்
    காரைக்கால் அம்மையார்.

    ஆங்கு 
    ஆலங்காடு ஆலயத்தில் ஆண்டவனின் 
    நடனக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து 
    தொழுது வணங்கி 'கொங்கை திரங்கி' என்ற முத்திருப்பதிகத்தைப் 
    பாடி மகிழ்ந்தார்.

    திருஞான சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரப் பதிகம் பாடுவதற்கு 
    பல ஆண்டுகளுக்கு முன்னரே 
    'கொங்கை திரங்கி' என்ற திருப்பதிகத்தை தேவாரத்திற்கு தோற்றுவாய் போல் பாடியருளினார் காரைக்கால் அம்மையார் என்று இன்றும் போற்றுகின்றார்
    சைவச் சான்றோர்.

    ஆனந்த கூத்தனின் ஆனந்தக் கூத்தை 
    முன் வணங்கி பெருங்காதல் எழுந்தோங்க பெரிதும் வியப்பெய்தி 
    இத் திருப்பதிகம் 
    பாடி முடித்தார்.

    கூத்தபிரான்
    ஆடும் திருக்கூத்தை சேவடிக்கீழ் என்றும் நீங்காது அமர்ந்து பாடும் வரம் பெற்றதால் இன்றுவரை  இறவாது பாடிய வண்ணமே திருவாலங்காடு தலத்தில் அருட்காட்சி தருகிறார் காரைக்காலம்மையார்.

    சிவபெருமானால் "அம்மையே"
    என அழைக்கப்பட்ட பெருமை வேறு 
    எவருக்கும் இல்லை என்பது 
    காரைக்கால் அம்மையாரின் 
    அருட் சிறப்பு.

    அறுபத்து மூவரில் 
    மூவரே பெண்டிர்.

    இசைஞானியார்.
    மங்கையற்கரசியார்.
    காரைக்கால் அம்மையார் ஆகிய அம்மூவரில்
    இயல் இசையில் வல்லவர் காரைக்கால் அம்மையார் என்பது 
    அம்மையின் தமிழ் சிறப்பு.

    'பேயார்க்கும் அடியேன்..' இது சுந்தரர் வாக்கு .

    அம்மை அடிமலர் வாழ்க !

    (காரைக்கால் அம்மையார் புராணம் -நிறைவுற்றது)

  • Kulachirai Nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சைவத்தை வளர்ப்பதற்கும் 
    சமயத்தை அழிக்க நினைப்போரை 
    வேரொடு வேராய் 
    அழிக்க வல்லவருமான சமய ஞான வீரரை தரிசிக்க 
    ஆவல் கொண்டனர்
    மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்.

    அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற ஞானசம்பந்தரரை மதுரைக்கு 
    அழைத்து வந்தால் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்பதில் 
    உறுதியாய் இருந்த குலச்சிறையார் 
    அரசியாரிடம் கலந்துரையாடி திருமறைக்காடு விரைந்தார்,
    ஞானசம்பந்தரைத் தரிசித்து 
    பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர.

    வழியில் எதிரே 
    ஒரு சிவிகை.
    சிவிகையைச் சுற்றி 
    'சிவ சிவ ' என
     ஒலித்தவாறு 
    அடியவர் கூட்டம்.

    சிவிகையினுள்
    அன்பொழுக 
    அருள் பெருக அமர்ந்திருந்தார் ஆளுடைய பிள்ளை.

    திருஞானசம்பந்தரைப் பற்றி நிறையக் 
    கேள்விப் பட்டிருந்த 
    குலச்சிறையார் குதிரையிலிருந்து அவ்விடத்திலேயே இறங்கி கைகூப்பியபடி
    நிலமிசை வீழ்ந்தார்.

    'யார் இவர் ?'
    என அருகிருந்தோரிடம் கேட்டறிந்த 
    சிவஞானச் செல்வர் சிவிகையில் இருந்து இறங்கி வந்து 
    குலச்சிறையாரை 
    தோள் தூக்கி
    ஆசி தந்து
    ஆரத் தழுவினார்.

    நலம் 
    விசாரிப்புக்குப் பின்பு
    நாடு பற்றி பேச்சு எழுந்தது.

    சமணத்தால் 
    நாடு படும் பாடு குறித்து குலச்சிறையார் விவரிக்க
    நிலைகுலைந்து போனார் ஞானசம்பந்தர் பெருமான்.

    சைவம் தழைக்கவே 
    தான் தேசசஞ்சாரம் செய்வதாகக் கூறிய ஞானசம்பந்தர் 
    பாண்டிய நாட்டிற்கு 
    வர ஆர்வம் காட்டினார். உடனே சம்மதித்தார்.

    விடைபெற்று  
    பரிமேலேறி
    காற்றை விட வேகமாக பாண்டியநாடு விரைந்து பட்டத்தரசியிடம் நடந்ததைக் கூறி
    வரவேற்பு ஏற்பாடுகளில் மனத் துள்ளலோடு ஈடுபடலானார்.

    பாண்டிய நாட்டின் பட்டத்தரசி மங்கையர்க்கரசியார்
    எல்லை வரை சிவிகையில் 
    வந்து 
    எல்லையில்லா பக்தியோடும் நம்பிக்கையோடும் ஞானசம்பந்தரரை
    வணங்கி வரவேற்றார்.

    முதல் அமைச்சர் குலச்சிறையார் முறைப்படி 
    அரசனிடம் சொல்லிவிட்டு
    மகாராணியோடு வந்து
    ஞானக் குழந்தையை
    முகமலர்ந்து வரவேற்றார். 

    ஞானசம்பந்தர் மதுரையிலேயே சிலகாலம் 
    தங்க ஏற்பாடாயிற்று.

    சமணர்களால் சம்பந்தருக்கு தீங்கேதும் நேர்ந்துவிடும் என்பதை யூகித்த
    முதலமைச்சர் குலச்சிறையாருக்கு 
    பலத்த காவலுக்கு
    ஏற்பாடு செய்திருந்தார்.

    ஞானசம்பந்தரை
    மதுரையம்பதி உறையும் சொக்கநாதரைத் 
    தரிசிக்க வைத்து 
    தானும் உடனிருந்து பெரும் பாக்கியம் பெற்றார்
    குலச்சிறையார்.

    ஞானசம்பந்தர் 
    தனது 
    இணையற்ற அருளாற்றலால் மன்னனின் மனதை மாற்றி 
    சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிவிட்டால் 
    'தங்கள் கதி அதோ கதி'
    என அஞ்சிய சமணர்கள் கொடும் திட்டம் தீட்டினர்.

    பாண்டிய வீரர்களின் கட்டுக் காவலை மீறி ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு 
    தீ வைத்தனர் 
    தீய மனதோர்.

    சமணர்கள் வைத்த 
    பெரும் தீ 
    அனல் விழியனின் 
    அருள் புதல்வனை 
    என்ன செய்துவிடும் ?

    எம்பிரானை எண்ணி 
    ஒரு பதிகம் பாடி
    'தீ எய்தவரையே 
    சென்று சேரட்டும்' என கோபம் காட்டினார் ஞாலமும் அறிந்த ஞானசம்பந்தர்.

    அவர் வாக்கு சற்றும் பொய்க்காமல் 
    அப்பெருந்தீ 
    அரசனின் வயிற்றைச் சென்றடைந்தது.

    மன்னன் தீராத 
    வெம்மை 
    நோயில் வீழ்ந்தான். பெரும் நெருப்பு தீண்டிய புழுவாய் துடித்தான்.

     சமணர்கள் சமணத்துறவிகள் தாங்கள் அறிந்திருந்த அனைத்து மருந்துகளையும் மந்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்தனர்.

    வெம்மை
    கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
    கோபம் கொண்டு
    சமணர்களை நோக்கி மன்னன் வீசிய வார்த்தைகள் வெம்மையாய் சுட்டன.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாதரசி மகராசியாரும் முதலமைச்சர் குலச்சிறையாரும் மன்னனிடம் திருஞானசம்பந்தரின் மகத்துவங்களை எடுத்துச்சொல்லி 
    அவரை அழைத்து வர அனுமதி கேட்டனர்.

    சமணமே 
    பெரிதெனக் கருதி 
    அதுகாறும் 
    சமணம் தழுவி 
    அரசாண்டு வந்த மன்னன் 
    வெம்மை நோயைக் கூட தீர்க்க முடியாத 
    பொய் மதம் 
    சமணம் 
    என வெறுத்து ஞானசம்பந்தரைத் தரிசிக்க 
    விருப்பம் தெரிவித்தான்.

    வந்தார் 
    ஆளுடைய பிள்ளை.

    கனிவாய் பார்த்து புன்னகையால் 
    ஆசி கூறி 
    வெண்ணீறைக் கையிலெடுத்து உடலெங்கும் பூசி விட்டார் சிவநாமம் அர்ச்சித்தபடி.

    என்ன மாயமோ அக்கணமே 
    பாண்டியனின் நோய் பறந்தோடிப் போனது.

    மன்னன்
    மனதில் இருந்த அஞ்ஞான இருளும் அகன்று போனது.

    தீரா நோய் 
    தீர்க்கப்பெற்ற அனுபவத்தால் சைவத்தின் 
    பெருமையை உணர்ந்த 
    பாண்டிய மன்னன் அடுத்தகணமே
    சைவம் தரித்தான்.

    ஞானசம்பந்தரின் திருவடிகளில் 
    தன் நெற்றி பதித்து கண்ணீர் வடித்தான்.

    அது நாள் வரை தன்னையும் 
    தன் குடிகளையும் 
    நம்பவைத்து 
    மதம் மாற்றிய சமணர்களுக்குத் 
    தக்க தண்டனை தர முடிவெடுத்தான்.

    அதற்குள்ளாகவே மன்னன்  ஞானசம்பந்தரால்
    குணமான செய்தி பாண்டிய நாடெங்கும் பரவிவிட்டது.

    பயந்துபோன 
    சமணத் துறவிகள் ஞானசம்பந்தரை வம்பிழுக்கும் நோக்கில் வாதப் போருக்கு அழைத்தனர்.

    மூன்று வகை வாதங்களான
    சுர வாதம் 
    அனல் வாதம் 
    புனல் வாதம் 
    அறிவு தெளிய நடந்தேறின.

    முதல் இரண்டு வாதங்களில் 
    தோல்வி கண்ட சமணர்கள் 
    'புனல் வாதத்தில் தோற்றால் வேந்தனே எங்களைக் கழுவேற்றலாம்' என 
    மார் தட்டினர்.

    ஆனால் அதிலும் ஞானசம்பந்தர் 
    வெற்றிக் கொடி நாட்டினார்.

    முதலமைச்சர் குலச்சிறையார் 
    வாதம் புரிந்து தோற்ற 
    சமண குருமார்களையும் ஓடி ஒளிந்த சமணர்களையும் ஒருவரைக் கூட 
    விடாமல் பிடித்து 
    கழுவேற்றினார்.

    அப்படி 
    கழுவேற்றப்பட்டு 
    மாண்ட சமணர்களின் எண்ணிக்கை 
    எட்டாயிரமாம்.

    அதன் பின்னர் 
    பாண்டிய மன்னன் அரசியாருடன் சேர்ந்து குலச்சிறையார் ஆலோசனையுடன் செய்த 
    சிவப் பணிகள் 
    பல்லாயிரம் இருக்கும்.

    அதனால் 
    பாண்டிய நாட்டில் 
    சமணம் பூண்டோடு அழிந்தது.
    சைவம் தழைத்தது.

    'வந்த வேலை 
    இறை விருப்பப்படி முடிந்துவிட்டது'
    எனக் கருதி
    சில நாட்களில் ஞானசம்பந்தர் 
    சோழநாடு புறப்பட்டார்.

    குலச்சிறையாருக்கு ஞானசம்பந்தருடனேயே சோழநாடு சென்று 
    சமயப் பணி தொடர 
    ஆசை மிகுந்தது.

    ஞானசம்பந்தர் 
    புறப்படும் தருணம் வரை 
    அவரது சம்மதத்திற்காக காத்திருந்தார். கண்ணசைவுக்காக
    முகம் பார்த்திருந்தார்.

    ஞானசம்பந்தரோ "இங்கிருந்தபடியே 
    சைவம் தழைக்க 
    சமயப் பணியாற்றுங்கள். சிவநெறி போற்றி இருங்கள்." எனக் கனிவோடு 
    உத்தரவிட்டு விட்டு மகிழ்வோடு விடைபெற்றார்.

    திருஞானசம்பந்தரின் திருவாக்கே
    இறைவாக்கு என உணர்ந்த 
    குலச்சிறையார் பல்லாண்டு 
    சிவப் பணிகள் செய்து ஒரு நன்நாளில் 
    மதுரையம்பதியிலேயே முக்தியடைந்தார்.

    சிவபுரியில் 
    சிவபிரான் அருகில் தேவகணங்களுடன் அவர்களில் ஒருவராய் 
    பேரருளோடு 
    திகழத் தொடங்கினார். இன்றும் 
    அருள் சுரந்து கொண்டிருக்கிறார்.

    குலச்சிறையாரை  'பெருநம்பி' எனப் போற்றுகின்றனர் தாங்கள் அருளிய பதிகங்களில் 
    நம்பியாரூராரும் ஒட்டக்கூத்தரும்.

    இது 
    குலச்சிறையாருக்கு கிடைத்த 
    இறையம்சம் கொண்ட
    நாயனார் விருது.

    நம்பி என்றால் 
    ஆண்களில் மேன்மையானவர் 
    என்று பொருள்.

    'குணம் கொடு 
    பணியுங் குலச்சிறை' எனப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

    'பாண்டிய நாடு முழுதும் சமண இருள் 
    கவிழ்ந்த போது 
    ஆணில் ஒருவரும் பெண்ணில் ஒருத்தியுமே சைவத்தில் நிலைத்து நின்று காத்தவர்கள்.

    ஆணில் 
    குலச்சிறை நாயனார்.
    பெண்ணில் மங்கையர்க்கரசியார் ' என்று நன்றியோடு புகழ்மாலை சூட்டுகிறார்   வாரியார் சுவாமிகள்.

    'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் ' 
    – சுந்தரமூர்த்தி நாயனார்.

  • Kulachirai nayanar puranam part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பழம் பெருமை  
    பல கொண்ட 
    புகழ்மிகு நாடு 
    பாண்டிய நாடு.

    பாண்டிய நாட்டிற்கு ஆன்மீகச் சிறப்பு சேர்க்கும் சிவ தலங்கள் பல உண்டு.

    அதில் ஒன்று மணமேற்குடி.

    நெற்பயிர் நிறைந்த வயல்கள்.
    கரும்புப் பயிர் 
    சூழ்ந்த தோட்டங்கள். 
    கமுக மரங்கள் 
    பரந்த புறம்புகள்
    என பசுமை மிளிர் 
    நகரே மணமேற்குடி.

    மணமேற்குடியில் அவதரித்து 
    சிவனடியார் 
    சேவை புரிந்து 
    உரிய காலத்தில் 
    சைவம் காத்த பெருமை கொண்டவர் 
    குலச்சிறை நாயனார்.

    மணமேற்குடியில் குடிகொண்டிருக்கும் ஜகதீஸ்வரனாரைத் தரிசிக்க நாள்தோறும்
    சிவனடியார்கள் 
    வந்த வண்ணம் இருப்பர்.

    அதற்கான 
    அருள் ஆற்றல் கொண்ட
    ஆன்மீகச் சிறப்பு அக்கோயிலுக்கு இருக்கிறது.

    அக் கோயிலை
    நிர்மாணித்து
    அர்ப்பணித்தவர் 
    யார் தெரியுமா ?

    திருவாசகம் அருளிய மாணிக்கவாசகப் 
    பெருமானார். 

    அதனாலேயே சிவனடியார்கள்       பிறவிப் பிணி தீர்க்க
    மாணிக்கவாசகரைத் 
    தேடி வந்து விடுவார்கள்.

    ஜகதீஸ்வரர் கோயிலுக்குத்
    தினந்தோறும் சென்று 
    சிவ பாதங்களைத் தொழும் வழக்கம் உடையவர் குலச்சிறையார்.

    சிவ பாதங்களை மட்டுமல்ல சிவனடியார்களை கண்டாலும் 
    அவர்தம்
    காலடி விழுந்து 
    கொண்டாடி மகிழ்வார்.

    சிவனடியார்களைக்
    கண்ட மாத்திரத்திலேயே கூப்பிய கரங்களோடு வணங்கி வரவேற்று தாள்பணிந்து 
    ஆசி பெற்று 
    அவர்கள் அகமகிழ உபசரித்து வழியனுப்புவது குலச்சிறையாரின் சிவதொண்டு.

    நெற்றியில் திருநீறு கழுத்தில் உருத்திராட்சம் நாவினில் பஞ்சாட்சரம் என்று வருகை தரும் சிவநேசர்களைக் 
    கண்டால் போதும் 
    பிறவிப் பயன் 
    அடைந்த மாதிரி உபசரித்து உளமகிழ்ந்து
    அருள் பெறுவார்.

    சிவனடியார் வழிபாடே சிவ வழிபாடு என்பது அவரது வாழ்வியல். சிவனடியார்களைச் சிவனாக பார்ப்பதே அவரது பண்பியல்.

    வரும் சிவனடியார் 
    உயர் குலமா 
    பிற குலமா நற்குணத்தவரா
    தீங்குணத்தவரா என்றெல்லாம் 
    ஆராய மாட்டார்.

    வேறுபாடு 
    பார்க்க மாட்டார்.
    வேறுபாடும்
    காட்ட மாட்டார்.

    தனித்து வந்தாலும் கூட்டமாக வந்தாலும் துதித்து வணங்குவார். முகம் மலர்ந்து
    உபசரித்து மகிழ்வார்.  

    அனுதினமும் சிவனடியார்களைத் தரிசிப்பதை 
    வழக்கமாகக் கொண்டிருந்ததால் 
    அவர் இருக்குமிடம் ஆண்டு முழுதும் 
    சிவ மணம் கமழ்ந்த வண்ணம் இருக்கும்.

    இத்தனைக்கும் குலச்சிறையார் 
    சாதாரண பிரஜை அல்ல.

    பாண்டிய நாட்டின் 
    பெரும் செல்வந்தர். ஆனால் 
    செல்வம் அவருக்கு வெறும் தூசு.
    சொத்தெல்லாம் 
    சிவன் சொத்து 
    என்று கூறி புன்னகைப்பார்.

    அவர் ஒரு போர்வீரர்.
    வெறும் வாய்ச்சொல் 
    வீரர் அல்ல.
    நாடு காக்கும் 
    நற்படைக் காவல்தலைவர்.
    சிவப் படையின் 
    தளபதி தானென்று நினைத்து மிடுக்கோடு வலம் வருவார்.

    எப்போதும் 
    தன்னைச் சிவனடியார்களின் 
    அடித்தொண்டர்களின் ஒருவராகவே
    கருதிப் பணி செய்வார்.

    பின்னாளில் 
    பாண்டிய நாட்டின் முதலமைச்சராக 
    பாண்டி மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கபரிபாலனம் மேற்கொண்டபோதும் தன்னை 
    முதலமைச்சராக கருதாமல் சிவனடியார்களின் அடிமையாகவே 
    எண்ணி வாழ்ந்தார்.

    திருநீறு 
    உருத்திர மாலை பஞ்சாட்சரம் 
    கோவணம் என 
    சிவக் கோலமே முதலமைச்சரின் அடையாளமாய் இருந்தது.

    அப்போது 
    பாண்டிய நாட்டின் அரசனாக இருந்தவன் 
    நின்றசீர் நெடுமாறனார் என்பவன்.
    அவனது இயற்பெயர் மாறவர்மன் அரிகேசரி.

    பின்னாளில் 
    அவன்தான் 
    கூன் பாண்டியன் என அழைக்கப்பட்டான்.

    அவனுக்கு ஏனோ 
    சமண மதத்தின் மீது 
    ஓர் ஈர்ப்பு.
    அதனால்
    சமண மதத்தைத்
    தூக்கிப் பிடித்தான். அவனையொட்டி குடிமக்களும் 
    சமணம் சாய்ந்தனர்.

    குல பேதம் பார்க்காத குணக்குன்றே 
    தனது முதலமைச்சராக இருக்க வேண்டுமென குலச்சிறையாரை முதலமைச்சராக நியமித்தான்.

    குலத்தைக் காப்பவர் என்னும் பொருளில் தான்
    அவருக்கு குலச்சிறையார் என்ற பெயரே வந்தது.

    ஆம்…
    குல பேதம் காணும்
    இழி குணத்திற்குச் சிறையிட்டவர்
    குலச்சிறையார்.

    முதலமைச்சரான குலச்சிறையாருக்கு சமணம் ஏற்புடையதல்ல. என்றாலும் 
    தம் உயிர்க் கொள்கையான
    சைவம் போற்றினார். சைவம் தழைக்க விரும்பினார்.

    செந்தமிழ் பாடல்களால்
    செஞ்சடையனைத் துதித்தபடி 
    நல்ல காலத்திற்காகக் காத்திருந்தார்.

    பாண்டிய மண்ணில் சைவம் அழியாதிருக்க சைவத்தின் வழிநின்று நல் முயற்சிகள் பல மேற்கொண்டார்.

    நல்ல வேளையாக 
    சைவத் திருத்தொண்டை 
    தன் பிறவிப் பயனாக கருதி வாழ்ந்து வந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் 
    சிவ பணிகளை இடைவிடாது மேற்கொண்டிருந்தார்.

    மங்கையர்கரசியார் செய்து வந்த திருத்தொண்டுகளால் குதூகலித்த குலச்சிறையார் 
    அரசமாதேவிக்கு
    மெய்த் தொண்டராய் துணை நின்றார். 

    'பயிரை வளர்த்தால் 
    மட்டும் போதாது 
    பயிரை அழிக்க முயலும் கோரைப்புல் போன்ற களைகளைக் களைந்தெறிய வேண்டும்' என்பது குலச்சிறையாரின் கருத்தாய் இருந்தது.

    'ஆண்டவனுக்குச் செய்வது ஆராதனை.
    அடியவருக்குச்
    செய்யும் வழிபாடு சமராதனை.

    'சம' என்பதற்கு 'நல்ல' என்று பொருள்.
    அடியவருக்குச் செய்யும் வழிபாடு 
    செய்தாலே போதும். 
    விரைந்து 
    முக்தி  கிடைத்து விடும்' 
    என்பது
    மங்கையர்க்கரசியாரின் செயல்பாடாய் இருந்தது. 

    அது உண்மைதான்.

    பட்டினத்தார் 
    நேரே இறைவனை வழிபட்டார்.
    பத்ரகிரியாரோ
    பட்டினத்தாரை 
    வழிபட்டார்.

    பட்டினத்தாருக்கு முன்னரே 
    பத்திரகிரியார் 
    முத்தி பெற்றார் 
    என்பது தானே
    முக்தி இரகசியம் ?

    இதனை உணர்ந்து பட்டத்தரசியாரும் குலச்சிறையாரும் எவ்வளவோ 
    திருத்தொண்டுகள் புரிந்தும் 
    சைவம் அருகி
    சமணம் பெருகி வந்தது.

    காரணம் 
    மன்னனின் விருப்பமே மக்கள் விருப்பமாக மலர்ந்தது.
    இதில் 
    சமணர்களின் சூதும் கலந்திருந்தது.

    இந்த சமயத்தில் 
    பாண்டிய நாட்டிற்கு அருகே உள்ள திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் தங்கியிருப்பதாகத் 
    தகவல் வந்தது.

    அரசி 
    மங்கையர்க்கரசியாருக்கும் 
    முதல்வர் குலச்சிறையாருக்கும் 
    ஏக மகிழ்ச்சி.

    (குலச்சிறை நாயனார் புராணம் தொடரும் )
     

  • Enadi nadha nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மறுநாள் 
    ஏனாதி நாதருக்கு 
    ஒரு செய்தி அனுப்பினான்
    அதிவீரன்.

    "எதற்கு 
    அனாவசியப் போர் ?அப்பாவிகள் ஏன் 
    உயிர் விட வேண்டும்??

    நமது இருவருக்கும் 
    தானே பகை ?

    பக்கத் துணை யாருமில்லாமல் 
    போர் செய்வோம்.

    நானும் தனித்து வருகிறேன்.
    நீயும் தனியாளாய் வா.

    ஒத்தைக்கு ஒத்தை பார்த்து விடுவோம் 
    ஒரு கை.

    ஊர் எல்லையில்
    இருக்கும் 
    காட்டுப்பகுதியே 
    சண்டைக் களம்.

    வென்றவர் மட்டுமே 
    வருங்காலத்தில்
    வாட் பயிற்சிக்கு வாத்தியார்"

    என்பதே வந்த ஆள் சொன்னார் 
    போர்முரசின் சாராம்சம்.

    சொன்ன நாளில் 
    குறித்த நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருந்தார் 
    ஏனாதி நாதர்.

    தனியாளாக 
    வருகிறானா…
    இல்லை…
    காட்டில் பலரை முன்னேற்பாடாக 
    ஒளித்து வைத்திருக்கிறானா
    என நினைத்தாரே தவிர ஆயிரம் பேர் வந்தாலும் எதிர் கொள்ளத் 
    தயாராக இருந்தார் ஏனாதிநாதர்.

    அதிசூரனும் 
    அப்படி ஒரு திட்டத்தில் தான் இருந்தான்.

    ஆனால் அதை விட 
    ஒரு பெரும் சூழ்ச்சியின் சூட்சமம் 
    அவனுள் 
    பொறி தட்டியதால்
    அத்திட்டத்தைக் கைவிட்டான்.

    ஏனாதிநாதர் 
    நாற்புறமும் 
    பார்வையைச் சுழற்றியவாறே காத்திருக்க 
    அதிசூரன் 
    ஒரு கையில் வாளுடனும் மறுகையில் கேடயத்துடனும் 
    தனித்தே வந்தான்.

    ஆனால் 
    ஏனோ முகத்தை கேடயத்தால் மறைத்தபடி
    வந்தான்.

    அவனைப் பார்த்த மாத்திரத்தில் 
    ஓ(ம்)வென கத்தியவாறே அவன்மீது
    புலி போல் பாய்ந்தார்  ஏனாதி நாதர்.

    கேடயம் அவன் 
    முகம் விட்டு நழுவியது.

    முகத்தில் திருநீறு. 
    அதுவும் மூன்று கீற்று.

    ஏனாதி நாதருக்குப் போரிடத் தோன்றவில்லை.

    'திருநீறு அணிந்து 
    சிவன் ஆகிவிட்டவனிடம் வாட்போரா…?

    தவறு….  தவறு

    நல்லவேளை வாளை வீசாதிருந்தேன்'

    கேடயத்தையும் கூர்வாளையும் 
    தாழ்வாக்கி 
    அதிசூரனைப் பார்த்து புன்னகைத்தார் ஏனாதிநாதர்.

    திட்டம் பலித்து விட்ட மகிழ்வில் 
    ஏனாதி நாதரை 
    வாள் வீசி 
    கொல்லத் துடித்தான் அதிசூரன்.

    அவன் அப்படி 
    செய்து விடுவானோ என ஏனாதிநாதரும் பயந்தார்.

    ஒரு சிவ வடிவில் இருப்பவருக்கு 
    கொலை செய்த
    பழிபாவம் வந்துவிடுமோ என தான் 
    ஏனாதியார் பயந்தார்.

    சிவ பக்தனுக்குத் 
    தோஷம் வந்துவிடக்கூடாது 
    என்று அஞ்சிய 
    ஏனாதி நாதர் 
    போர் புரிபவர் போல் கொஞ்சம் நடித்தார்.

    சும்மா போரிட்டபடியே 
    அவனிடம் 
    தன் எண்ணம் சொல்லி இனிமேல் அவனே 
    வாள் வித்தை கற்பிக்கட்டும் 
    என்று உறுதி சொல்லி
    வாட் போரை 
    நிறுத்தி விடலாம் 
    என நினைத்தார்.

    ஆனால் ஆத்திரக்காரனுக்குப் 
    புத்தி மட்டு என்பதை உறுதியாக்கும் வகையில்
    ஏனாதி நாதரின்
    நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளாத அதிசூரன் 
    அதிவீரன் போல் 
    ஏனாதி நாதரை 
    வாள் வீசிக் கொன்றான்.

    ஜெயபேரிகை 
    கொட்டிய வண்ணம்
    ஊராரிடம் 
    தம்பட்டம் அடிக்க
    ஊருக்கு விரைந்தான்.

    அப்போது செஞ்சடை மின்னலிட வெளிப்பட்டார் இந் நாடகத்தின் இயக்குனர் 
    சிவபிரான் தேவியோடு.

    "வெண் திருநீறு அணிந்தவரெல்லாம் சிவவடிவம் என 
    எப்பேதமுமின்றி 
    பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருக்கும்
     ஏனாதி நாதரே!

    எனதன்பு 
    ஏனாதி நாத நாயனாரே!

    விழித்திடு. எழுந்திரு."

    ஆண்டவனின் கட்டளையை 
    அப்படியே ஏற்றார் 
    ஏனாதி நாத நாயனார்.

    உயிர் பிழைத்து
    உயிர்ப்போடு எழுந்து 
    தாள்பணிந்து 
    இறை வணங்கி நின்றார்.

    "மெய்யன்பரே…!

     

    வஞ்சகனின் 
    சூதை மீறி 
    திருமண் அணிந்திருந்ததாலே அவனை
    என் போல் பாவித்து கொலை ஏற்று 
    உலகப் பாசம் 
    அறுத்த அருளாளரே…!

    நீர் என்றென்றும் 
    எம்மை விட்டுப் பிரியாத வாழ்வைப் பெறுவாயாக!

    வா….
    சிவபுரி  செல்வோம்."

    என அழைத்தார் 
    சிவபுரித் தலைவர்.

    காட்டிலிருந்த 
    ஓரறிவு முதல்
    ஐந்தறிவு வரையிலான ஜீவிகள் அனைத்தும்
    வியந்து பார்க்க வானிலிருந்து விழுந்த மலர்களை நுகர்ந்தபடி
    விண்ணில் பறந்து மறைந்தார் 
    ஏனாதி நாத நாயனார்.

    'வேடநெறி நில்லார்
    வேடம் பூண்டு 
    என்ன பயன் ?'
    என்ற திருமூலர் வாக்குப்படி
    சிவனடியார் போல் 
    பொய் வேடம் பூண்ட அதிசூரன் 
    ஊர் தூற்ற வாழ்ந்து பின்னரும் நரகத்தில் துன்பமுற்றான் 
    என்கிறார்
    வாரியார் சுவாமிகள்.

    கிபி 660-840 வாக்கில் இயற்பகை நாயனார் இளையான்குடி நாயனார் ஏனாதி நாத நாயனார் வாழ்ந்ததாக ஓர்
    ஆய்வுக் குறிப்பு உள்ளது.

    'ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

    திருச்சிற்றம்பலம்.

    (ஏனாதிநாத நாயனார் புராணம்- முடிவுற்றது)
     

  • Enadhi naadha nayanar puranam

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    புலிக்கொடி பறந்த சோழநாட்டில் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் 
    அரிசிலாற்றங்கரையில் சிவபுரி போல் அமைந்திருக்கும் அருள்மிகு ஊர் எயினனூர்.

    அவ்வூரில் தான் அவதரித்தார் 
    ஏனாதி நாத நாயனார்.

    ஏனாதி நாத நாயனார் 
    ஈழகுலச் சான்றார் குலத்தைச் சேர்ந்தவர்.
    கள் இறக்கும் சமூகம்.

    சான்றார் என்பதே காலப்போக்கில் 
    சாணார் என்று மருவியதாகச் சொல்வர்.

    அக்காலத்தில் 
    சேனைத் தலைவர்களுக்கு ஏனாதியர் என்ற 
    பெயர் இருந்தது.

    சங்க காலத்தில் 
    அரசர்கள் 
    ஏனாதியருக்கு 
    நெற்றியில் அணியும் தங்கப் பட்டமும் 
    விரலுக்கு 
    ஏனாதி மோதிரமும் அளித்து வருவதை மரபாகக் கொண்டிருந்தனராம்.

    இப்படிப்பட்ட 
    சிறப்பான குலத்தில் தோன்றிய ஏனாதிநாதர் சிவனிடத்தில் 
    பேரன்பு கொண்டவர்.

    சிவ கோலத்தில் இருப்பவர்களைக் கண்டால் 
    மனம் நெகிழ்ந்திடுவார்.

    நெற்றியில் திருநீறு 
    அணிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பரவசமாகி விடுவார்.

    புனித திருநீறைப் முக்கீற்றாகப் 
    பூசுபவர்கள் 
    ஏனாதி நாதரைப பொறுத்தமட்டில் 
    பூசிக்கத்தக்கவர்கள்.

    அதற்கு அவரிடம் 
    நிறையக்
    காரணங்கள் இருந்தன.

    திருநீறு 
    சிவபக்தியின் புறச்சின்னம்.

    அகம்பாவம் 
    சுயநலம் 
    மயக்கம் என்ற மும்மலங்களை அழிக்கவல்லது.

    பொருளாசை பெண்ணாசை
    புத்திர பாசம் 
    ஆகிய 
    மூன்று ஆசைகளைத் துறக்க வைப்பது.

    உலகப்பற்று 
    சமய வேத வாக்குவாதம் மற்றும் நம்பிக்கை 
    உடல் பற்று 
    ஆகிய மனச் சார்புகளைப் போக்கவல்லது.

    தூல சரீரம் 
    ஆவி சரீரம் 
    காரண சரீரம் 
    ஆகிய மூவகை உடல் பற்றுகளைக் கடந்து நிற்கச் செய்வது.

    விழிப்பு நிலை 
    கனவு நிலை 
    ஆழ்ந்த உறக்க நிலை முதலான 
    மூவகை அவஸ்தைகளிலிருந்து விலகி
    இறைவனோடு 
    கலக்க வைப்பது.

    பிணி நீக்கி 
    பிறப்பு இறப்பு 
    உள்ளிட்ட எல்லா நோய்களையும் நீக்கி முக்தியைத் தரவல்லது.

    இவை போன்ற
    ஆன்றோர் வாக்கினைப் 
    பரிபூரணமாக நம்பியதால் சிவ உருவமாகவே பார்த்தார் 
    விபூதி பூசியவர்களை.

    அவர்கள் 
    ஆசைப்பட்டால் 
    தன் உயிரைத் தரவும் சித்தமாக இருந்தார்.

    அவரைப் 
    பொறுத்த மட்டில் 
    திருநீறு சிவனின் ரூபம்.

    சிவ பணிக்கு அப்பால் ஏனாதி நாதரின் வருமானத்திற்கு
    ஒரு தொழில் இருந்தது.

    அது அரச குடும்பத்தினருக்கும் இளம் காளையருக்கும் வாள் பயிற்சி பயிற்றுவிப்பது.

    அதில் வரும் வருமானத்தில் திருநீறுடன் வருவோருக்கும் 
    சிவனடியாருக்கும் 
    உதவி, உபசரணை செய்துவந்தார்.

    வேண்டியவர் வேண்டாதவர் 
    நண்பர் பகைவர் 
    என்று பாராமல்
    உதவி புரிந்து வந்தார்.

    வாள் வலியும் 
    தோள் வலியும் 
    சிவ வலியும் 
    பெற்றிருந்த அவருக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பேரும் புகழும் 
    பெருகி வந்தது.

    மாணாக்கர் கூடினர்.
    ஓய்வறியாது கற்பித்தார்.
    ஊருக்கே உதவி வந்தார்.

    எல்லோருக்கும் 
    இன்பம் தரும் சந்திரன் கள்வருக்கு 
    வெறுப்பைத் தரும் அல்லவா ?

    நல்லரின் வளர்ச்சியை வெறுத்த புல்லன் 
    ஒருவன் அவ்வூரில் இருந்தான்.

    ஆதி சூரன் 
    எனப் பெயர் பெற்றிருந்த அவன் ஏனாதி நாதரின் உறவினன்-பங்காளி.

    அவனும் 
    வாள் பயிற்சி  
    கற்பிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தான்.

    அவன் வெறும் 
    வாய் வீச்சு வீரன்.
    தற்பெருமைக்காரன்.

    தனக்கு 
    ஒப்பாரும் மிக்காரும் யாருமில்லை 
    எனக் கருதிய 
    தலைக்கனத்தான். 

    வாள் வித்தை பயிற்றுவிக்கும் உரிமை தனக்கு மட்டும் 
    இருக்க வேண்டும் என பேராசைப்பட்டான்.

    ஆனால் அவனிடம் 
    கற்க வருபவர் எண்ணிக்கை 
    நாளுக்கு நாள் குறையவே அத்தனை ஏமாற்றமும் ஏனாதி நாதர் மீது வன்மையாய் பொறாமையாய் பகையாய் 
    வெடித்த வண்ணம் இருந்தது.

    இந்த முறையில்லாப் பகை காரணமாக 
    ஒரு நாள் 
    தன் உற்றாரையும் தன்னிடம் கற்றாரையும் கற்போரையும் 
    கொலைத் தொழில்
    புரிவோர்களையும் சேர்த்துக்கொண்டு படைகலன்களோடு வந்து ஏனாதிநாதர் 
    வீட்டில் தனித்திருந்த நேரம் பார்த்து  
    வீட்டின் முன் நின்று
    போருக்கு அழைத்தான்.

    அஞ்செழுத்தானை நெஞ்சில் கொண்ட
    அஞ்சா நெஞ்சரான ஏனாதிநாதர் 
    தனித்தே தயாரானார் போர் அறியா 
    பொய் வீரன் 
    அறைகூவலைக் கேட்டு.

    இடுப்பில் 
    இறுகக் கட்டிய கச்சையோடும்
    காலில் கட்டிய 
    வீரக்கழங்களோடும் 
    ஒரு கையில் 
    வாளுடனும் 
    மறு கையில் கேடயத்துடனும் 
    ராஜ சிங்கமாக 
    வீர கர்ஜனையோடு வெளியே வந்தார் ஏனாதிநாதர்.

    சிங்கத்தை சந்திக்க சிங்கத்தின் குகைக்கே வந்த குள்ள நரி போல அதிசூரன் 
    நின்றதைக் கண்டு சிரிப்புத் தான் வந்தது ஏனாதி நாதருக்கு.

    அதற்குள் 
    அக்கம் பக்கத்திலிருந்த அவரின் உறவினர்களும் மாணவர்களும் ஓடிவந்து 
    நிலைமை உணர்ந்து ஏனாதிநாதர் 
    இருபக்கமும் 
    அரண் போல் நின்றனர்.

    கூட்டத்தைப் பார்த்ததும் பயந்து போன 
    அதிசூரன் புத்திசாலித்தனமாய்,

    "ஏனாதியாரே…!
    இங்கு வேண்டாம் சண்டை… 
    இப்போதும் வேண்டாம்…

    சாலைக்கரைக் குளம் அருகே உள்ள 
    திடலுக்கு வா… 
    அதுவே 
    இருவருக்குமான 
    பொது இடம்.

    வாள் பயிற்சி தரும் தகுதி வெற்றி பெற்றவருக்கே"
    என 
    நிபந்தனை விதித்தான்.

    அவனே நாளும் குறித்தான்.

    அந்நாளில் 
    அதிசூரனின் கூலிப்படையும்
    ஏனாதி நாதரின் 
    வாள் படையும்
    திடலில் கூடின.

    உண்மையில் 
    ஒரு பெரும் 
    போரே நடந்தது.

    எக்கச்சக்கமானோர்
    கை இழந்தனர்
    கால் இழந்தனர்.
    தலை இழந்தனர்.

    தரைமண் 
    செங்குருதி
    மயமாகியது.

    பிணக் குவியலை கழுகுகள் வட்டமிட்டன.

    ஒருகட்டத்தில் 
    உயிர்பிழைத்தோரும் அதிவீரனும் 
    புறமுதுகிட்டுத் தப்பியோடினர்.

    அன்று இரவு
    அதிவீரனுக்குத் 
    தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
    அவமானம் மேலும் அவமானப்படுத்தியது.

    நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என நேர்மையாகத் தீர்மானித்தான்.

    ஏதேனும் தந்திரத்தால் வஞ்சகத்தால் 
    வெற்றி பெறலாம் 
    என முடிவெடுத்தான்.

    யோசித்தபடியே 
    தூங்கிப் போனான்.

     

    (ஏனாதி நாத நாயனார்  புராணம் -தொடரும்)