Tag: part 2

  • Karaikaal amayar puranam – Part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கைப்பிடித்த காரிகையைக் 
    கடவுள் அம்சம் என உணர்ந்து கொண்ட பரமதத்தன் 
    ஏதேனும் 
    சாக்கு போக்கு சொல்லி புனிதவதியிடமிருந்து அன்றாடம் விலக ஆரம்பித்தான். 

    நீண்டநாள் 
    விலகவும் திட்டமிட்டான். 

    'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழி அவன் நினைவுக்கு வந்தது.

    வணிகத்தைப் பெருக்குவதாக உறவினர்களிடம் சொல்லி பெரும்பொருள் ஈட்டு வர விரும்புவதாக 
    உறுதிபடக் கூறி அவர்களிடம் ஆசி பெற்றான்.

    புனிதவதியார் கூட மறுப்பேதும் சொல்லாமல் கண்ணீரோடும் 
    இனிமேலாவது 
    நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடும் 
    மீறி வந்த விம்மலோடும் அனுப்பிவைத்தார்.

    துறைமுகத்தில் 
    மரக்கலம் தயாராக இருந்தது.

    மனதார 
    குலதெய்வமாய் கருதிய 
    புனிதவதியாரை வணங்கிவிட்டு 
    கடல் வணிகர்கள் வழக்கமாக வணங்கும் வருண பகவானை துதித்து விட்டு 
    கடல் பயணம் மேற்கொண்டான் பரமதத்தன்.

    கணவன் போன 
    திசை வணங்கியபடி காத்திருந்தார் 
    கற்பு நெறியுடன் புனிதவதியார்.

    கணவன் திரும்ப வந்து கை பிடிப்பான்.
    அவன் மனதும் 
    தம்மிருவர் வாழ்வும் மாறும் என்ற 
    பெருத்த நம்பிக்கையோடு
    சிவ வழிபாட்டில் 
    பெருநேரம் கழித்தார்
    பெருமாட்டியார்.

    தினமும் 
    காலையில் கதிரவன் கடலில் எழுந்தான். மாலையில் மறைந்தான். மாலை முடிந்து 
    இரவு வந்தது.
    நிலவு வந்தது. 
    வளர்ந்தது. 
    தேய்ந்தது. 
    மறைந்தது.

    தீதறியா 
    புனிதவதியார் 
    கடலைப் பார்த்தபடி கடவுளைத் தியானத்தபடி கப்பல் வரும் 
    திசை நோக்கிக் காத்திருந்தார்.

    பரமதத்தன் 
    வரவே இல்லை.

    வெகு காலத்திற்குப் பின்-
    பின்னொரு நாள்
    பாண்டிய நாட்டில் பரமதத்தன் வசிப்பதாக காரைக்காலுக்கு 
    ஒரு வணிகத் 
    தகவல் வந்தது.

    ஊர்ஜிதம் செய்யப் போன உறவினர்கள் 
    பெற்ற செய்தி அதிர்ச்சியாய் இருந்தது.

    பெரும் பொருள் ஈட்டி தாயகம் திரும்பிய பரமதத்தன் 
    காரைக்கால் திரும்புவதைத் தவிர்த்து பாண்டிய நாடு சென்றிருக்கிறான்.

    அங்கு 
    வசதியோடு வணிகம் மேற்கொண்ட அவனுக்கு வணிகர் ஒருவர் 
    பெண் தந்து மணம் முடித்திருக்கிறார்.

    அந்த இருமனம் இணைந்த திருமணத்தின் பயனாக 
    ஓர் அழகுக் குழந்தை பிறந்திருக்கிறாள்.

    அக்குழந்தைக்கு பரமதத்தன் இட்ட பெயர் 'புனிதவதி'.

    இத்தகவல்கள் காரைக்காலுக்கு வருவதற்கு முன்னரே உற்றார் உறவினரோடு சிவிகை ஏறி 
    பாண்டிய நாடு சென்று கணவனைக் 
    கைப்பிடித்து 
    அழைத்து வர கிளம்பியிருந்தார் புனிதவதியார்.

    புனிதவதியார் 
    பாண்டியநாடு 
    வரும் தகவல் பரமதத்தனுக்கு முன்னதாகவே
    தெரிய வந்தது. 

    இளம் மனைவியையும் தன் பெண் மகவையும் அழைத்துக்கொண்டு 
    நகர எல்லைக்கு வந்து காத்திருந்தான் 
    பரமதத்தன்.

    புனிதவதியாரைப் பார்த்ததும் மூவரும் வணங்கினர்.

    "உமது அருளாலே தான் இத்தனை நாள் வாழ்கிறேன்.

    இந்த பெண் குழந்தைக்கு உமது பெயரையே வைத்துள்ளேன்.

    தாங்கள் தான் என் குலச்சாமி"

    காலில் விழுந்து கதறினான்.

    கணவன் 
    காலடி விழுந்து கதறுவதைக் கண்டு அஞ்சி பயந்து புனிதவதியார் 
    பூங்கொடி போல் தத்தளித்தார்.

    ஒன்றும் புரியாத சுற்றத்தார் வியந்து பரமதத்தனைப் பார்த்தனர்.

    "ஏன் மனைவியின் 
    காலில் விழுகிறாய் ?" ஆச்சரியத்தோடு கேட்டனர்.

    "இவர் 
    மானிடப் பிறவி அல்ல. தெய்வப் பிறவி. 
    நற்பெரும் தெய்வம். 

    இதை அறிந்து தான் விலகி வந்தேன்.

    என் குழந்தைக்கு 
    இவர் பெயரைத் தான் சூட்டியுள்ளேன்.

    ஆகையால் தான்
    நான் இத்தெய்வத்தின்
    பொற்பாதங்களை வணங்கினேன்.

    நீங்கள் அனைவரும் வணங்குங்கள்.
    நிச்சயம்
    நல்லது நடக்கும்"
    என்று பரமதத்தன் 
    பக்திப் பரவசத்தோடு பகர உறவினர்கள் 
    திகைத்துப் போயினர்.

    பின் 
    நடந்ததையெல்லாம் கதைபோலச் சொன்னான் பரமதத்தன்.

    அதேநேரம் நடந்ததையெல்லாம் கவனித்திருந்த புனிதவதியார் 
    கண்மூடி 
    தியானத்தில் ஆழ்ந்தார்.

    ஈசனிடம் 
    நேரடியாக 
    கோரிக்கை வைத்தார்.

    "தேவாதி தேவனே …! 
    என் கணவருக்கு 
    இப்படி ஓர் எண்ணம் வந்திருக்கிறது.

    எல்லாம் உன் செயல்.

     இத்தனை நாள் அவருக்காகவே
    உடல் வளர்த்தேன். வனப்புடன் இருந்தேன்.

    இப்போது அவரது உள்ளக்கிடக்கை வெளிப்படை 
    ஆகிவிட்டது.
    நானும் பூரணமாகப் புரிந்து கொண்டேன்.

    இனி எதற்கு எனக்கு அழகுக் கோலம் ?
    ஈர்க்கும் வனப்பு 
    எனக்கெதற்கு ? 

    என் 
    தசைகளைச் சுருக்கி 
    உன் 
    பூதகணங்களைப் போல் பேய்கணம் போல் 
    ஆக்கி விடு.

    பூத வடிவை மாற்றி 
    பேய் வடிவு தந்துவிடு."

    உணர்ச்சி பொங்க வேண்டி நின்றார்.

    புனிதவதியாரின் வேண்டுதலை 
    எப்போதும் 
    செவிமடுக்கும் செஞ்சடையன் 
    உடனே 
    திருவருள் புரிந்தார்.

    புனிதவதியார் பெண்மைக்கும் அழகிற்கும் ஆதாரமான ஊன் சதை வனப்பை உதறிவிட்டு வெறும் எலும்புக் கூடாய் 
    பேயாய் மாறி நின்றார்.

    ஆம் ….
    மயிலினம் தன் 
    சிறகுகளை உதிர்ப்பது போல்
    இந்த அழகு மயில்
    சதைகளை தசைகளை உதிர்த்தது.

    இதைக்கண்ட உறவினர் "பேய்' என அலறியவாறே அஞ்சி ஓடினர்.

    ஆனால் 
    பரமதத்தன் 
    மனம் தெளிந்து 
    பயம் விலகி 
    வணங்கி நின்றான்.

    அக்கணம் 
    விண்ணவரும் மண்ணவரும் 
    தோன்றி வணங்கினர்.

    வானம் 
    மலர்மழை பொழிந்தது.

    தேவ துந்துபிகள் தேவகானம் இசைத்தன.

    தேவர்களும் முனிவர்களும் 
    தம்மை மறந்து 
    ஆரவாரம் செய்தனர்.

    சிவகணங்கள் 
    ஆனந்தக் கூத்தாடின.

    இவற்றைக் கவனித்த உறவினர்கள் 
    பயம் நீங்கி 
    புனிதவதியாரைச்
    சூழ்ந்து வணங்கினர்.

    பேய்கணமாய் மாறிய புனிதவதியாருக்கு  இறையருளால் 
    உடல் வனப்பு 
    மாறினாலும் 
    குரல் இனிமையும் 
    தமிழ் புலமையும் 
    குன்றாதிருந்தது.

    கண்மூடிக் கனிந்துருகி "புவியாளும் இறைவா….
    உன்னுடைய அழகான திருவடிகளைப் போற்றும் நல்ல 
    சிவ பூதகணங்களில் ஒன்றானேன்."
    என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு…. 

    அற்புதத் திருவந்தாதியையும் இரட்டை மணிமாலை யையும் 
    பாடி அருளினார்.

    இதனைத் தொடர்ந்தே இறைவன் 
    புனிதவதியார் பிறப்பதற்கு முன்பே இரண்டாவது பெயர் என 
    குறித்து வைத்திருந்த 'காரைக்கால் அம்மையார்' என்ற புனித 
    பெயரைப் பெற்றார்.

    பாண்டிய எல்லையிலிருந்து 
    பேய் வடிவோடு திருக்கயிலாயம் 
    பயணப்பட விருப்பப்பட்டார் காரைக்கால் அம்மையார்.

    வழியில் 
    பார்த்தவர் எல்லாம் பயந்து ஓடினர். 

    காரைக்கால் அம்மை கவலை கொள்ளவில்லை. கயிலை மன்னன் திருநாமத்தை உச்சரித்தபடி 
    பயணம் தொடர்ந்தார்.

    'தன்னை யார் 
    அறிந்தால் என்ன ?
    என்ன பயன் ?
    இறைவன் 
    அறிவானாகில் போதும்' என எண்ணியபடி 
    எதற்கும் கலங்காது 
    பல நாள் பயணத்தில் கயிலாய மலையை அடைந்தார்.

    திருக்கயிலாய மண்ணை காலால் மிதிப்பது தவறு என கருதிய 
    காரைக்கால் அம்மையார் கயிலைநாதனை வேண்டியபடி 
    தலையால் நடக்கலானார்.

    வெள்ளி மலையை தலையால் ஏறினார் சிவன் அருளாலே 
    அவன் தாள் 
    வணங்கியபடியே.

    'திருவருள் 
    துணை செய்தால் தான்  சிவத்தை அடைய முடியும்' என்ற வேதவாக்கு காரைக்கால் அம்மையார் பயணத்தில் உண்மையானது .

    உலகமாதா 
    உமாதேவியார் 
    ஒரு பெண்மணி 
    பேய் வடிவில் 
    தலையால் 
    தம்மை நோக்கி வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு உமையொருபாகனிடம் சுட்டிக் காட்டினார்.

    முக்காலமும் உணர்ந்த
    முக்கண்ணர் புன்னகைத்தபடி

    "வருபவர் நமது அன்பிற்குரியவர். 

    வேண்டி 
    இவ்வுருவம் பெற்றவர்.

    என் அன்பு குழந்தை."
    என்று உமையிடம் சொன்னார்.

    உமாதேவியார் அம்மையாரின் 
    அன்பை வியந்து பாராட்டினார்.

    காரைக்கால் அம்மையார் அருகில் வந்ததும் "அம்மையே…!" என்று அன்போடு அழைத்தார் 
    அடியார்க்கினியர்.

    காரைக்கால் அம்மையார் "அப்பா….!" என கூறியவாறு எம்பெருமானின் 
    தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

    "இங்கு நம்மிடம் வேண்டுவது யாது ?
    நாம்  தரத் 
    தயாராக உள்ளோம்." என்றார் கயிலைப்பெருமான் எல்லை இல்லா கருணையோடு.

    நான்கு வரங்கள் கேட்டார் நற்றமிழ் அன்னையார்.

    "உம்மீது 
    இன்ப அன்பு வேண்டும்.

    என்றென்றும் இறவாத பிறவாமை வேண்டும்.

    மீண்டும் பிறப்பு உண்டேல் உம்மை என்றும் மறவாது இருக்க வேண்டும்.

    நீவீர் ஆனந்த நடனம் ஆடும் போது அடியேன் உன் திருவடியின் கீழ் மகிழ்ந்து பாடிய வண்ணம்  இருக்க வேண்டும்"

    என்று கனிந்துருகி கண்ணீர் மல்கக் கேட்டார் காரைக்கால் அம்மையார்.

    "அம்மையே…! தென்திசையில் பழையனூர் திருவாலங்காட்டில்
    நாம் நடனம் ஆடுவோம்.

    அங்கு 
    நீ சென்று 
    என் நடனம் கண்டு ஆனந்தப்பட்டு 
    எம்மை எப்போதும் பாடிக்கொண்டிரு."
    ஆசி தந்தார் 
    ஆதி சிவனார்.

    அதன்படி 
    திருவாலங்காடு தலத்திற்குத்
    தலையாலே 
    வைராக்கியத்தோடு நடந்து வந்தார்
    காரைக்கால் அம்மையார்.

    ஆங்கு 
    ஆலங்காடு ஆலயத்தில் ஆண்டவனின் 
    நடனக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து 
    தொழுது வணங்கி 'கொங்கை திரங்கி' என்ற முத்திருப்பதிகத்தைப் 
    பாடி மகிழ்ந்தார்.

    திருஞான சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரப் பதிகம் பாடுவதற்கு 
    பல ஆண்டுகளுக்கு முன்னரே 
    'கொங்கை திரங்கி' என்ற திருப்பதிகத்தை தேவாரத்திற்கு தோற்றுவாய் போல் பாடியருளினார் காரைக்கால் அம்மையார் என்று இன்றும் போற்றுகின்றார்
    சைவச் சான்றோர்.

    ஆனந்த கூத்தனின் ஆனந்தக் கூத்தை 
    முன் வணங்கி பெருங்காதல் எழுந்தோங்க பெரிதும் வியப்பெய்தி 
    இத் திருப்பதிகம் 
    பாடி முடித்தார்.

    கூத்தபிரான்
    ஆடும் திருக்கூத்தை சேவடிக்கீழ் என்றும் நீங்காது அமர்ந்து பாடும் வரம் பெற்றதால் இன்றுவரை  இறவாது பாடிய வண்ணமே திருவாலங்காடு தலத்தில் அருட்காட்சி தருகிறார் காரைக்காலம்மையார்.

    சிவபெருமானால் "அம்மையே"
    என அழைக்கப்பட்ட பெருமை வேறு 
    எவருக்கும் இல்லை என்பது 
    காரைக்கால் அம்மையாரின் 
    அருட் சிறப்பு.

    அறுபத்து மூவரில் 
    மூவரே பெண்டிர்.

    இசைஞானியார்.
    மங்கையற்கரசியார்.
    காரைக்கால் அம்மையார் ஆகிய அம்மூவரில்
    இயல் இசையில் வல்லவர் காரைக்கால் அம்மையார் என்பது 
    அம்மையின் தமிழ் சிறப்பு.

    'பேயார்க்கும் அடியேன்..' இது சுந்தரர் வாக்கு .

    அம்மை அடிமலர் வாழ்க !

    (காரைக்கால் அம்மையார் புராணம் -நிறைவுற்றது)

  • Kulachirai Nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சைவத்தை வளர்ப்பதற்கும் 
    சமயத்தை அழிக்க நினைப்போரை 
    வேரொடு வேராய் 
    அழிக்க வல்லவருமான சமய ஞான வீரரை தரிசிக்க 
    ஆவல் கொண்டனர்
    மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்.

    அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற ஞானசம்பந்தரரை மதுரைக்கு 
    அழைத்து வந்தால் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்பதில் 
    உறுதியாய் இருந்த குலச்சிறையார் 
    அரசியாரிடம் கலந்துரையாடி திருமறைக்காடு விரைந்தார்,
    ஞானசம்பந்தரைத் தரிசித்து 
    பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர.

    வழியில் எதிரே 
    ஒரு சிவிகை.
    சிவிகையைச் சுற்றி 
    'சிவ சிவ ' என
     ஒலித்தவாறு 
    அடியவர் கூட்டம்.

    சிவிகையினுள்
    அன்பொழுக 
    அருள் பெருக அமர்ந்திருந்தார் ஆளுடைய பிள்ளை.

    திருஞானசம்பந்தரைப் பற்றி நிறையக் 
    கேள்விப் பட்டிருந்த 
    குலச்சிறையார் குதிரையிலிருந்து அவ்விடத்திலேயே இறங்கி கைகூப்பியபடி
    நிலமிசை வீழ்ந்தார்.

    'யார் இவர் ?'
    என அருகிருந்தோரிடம் கேட்டறிந்த 
    சிவஞானச் செல்வர் சிவிகையில் இருந்து இறங்கி வந்து 
    குலச்சிறையாரை 
    தோள் தூக்கி
    ஆசி தந்து
    ஆரத் தழுவினார்.

    நலம் 
    விசாரிப்புக்குப் பின்பு
    நாடு பற்றி பேச்சு எழுந்தது.

    சமணத்தால் 
    நாடு படும் பாடு குறித்து குலச்சிறையார் விவரிக்க
    நிலைகுலைந்து போனார் ஞானசம்பந்தர் பெருமான்.

    சைவம் தழைக்கவே 
    தான் தேசசஞ்சாரம் செய்வதாகக் கூறிய ஞானசம்பந்தர் 
    பாண்டிய நாட்டிற்கு 
    வர ஆர்வம் காட்டினார். உடனே சம்மதித்தார்.

    விடைபெற்று  
    பரிமேலேறி
    காற்றை விட வேகமாக பாண்டியநாடு விரைந்து பட்டத்தரசியிடம் நடந்ததைக் கூறி
    வரவேற்பு ஏற்பாடுகளில் மனத் துள்ளலோடு ஈடுபடலானார்.

    பாண்டிய நாட்டின் பட்டத்தரசி மங்கையர்க்கரசியார்
    எல்லை வரை சிவிகையில் 
    வந்து 
    எல்லையில்லா பக்தியோடும் நம்பிக்கையோடும் ஞானசம்பந்தரரை
    வணங்கி வரவேற்றார்.

    முதல் அமைச்சர் குலச்சிறையார் முறைப்படி 
    அரசனிடம் சொல்லிவிட்டு
    மகாராணியோடு வந்து
    ஞானக் குழந்தையை
    முகமலர்ந்து வரவேற்றார். 

    ஞானசம்பந்தர் மதுரையிலேயே சிலகாலம் 
    தங்க ஏற்பாடாயிற்று.

    சமணர்களால் சம்பந்தருக்கு தீங்கேதும் நேர்ந்துவிடும் என்பதை யூகித்த
    முதலமைச்சர் குலச்சிறையாருக்கு 
    பலத்த காவலுக்கு
    ஏற்பாடு செய்திருந்தார்.

    ஞானசம்பந்தரை
    மதுரையம்பதி உறையும் சொக்கநாதரைத் 
    தரிசிக்க வைத்து 
    தானும் உடனிருந்து பெரும் பாக்கியம் பெற்றார்
    குலச்சிறையார்.

    ஞானசம்பந்தர் 
    தனது 
    இணையற்ற அருளாற்றலால் மன்னனின் மனதை மாற்றி 
    சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிவிட்டால் 
    'தங்கள் கதி அதோ கதி'
    என அஞ்சிய சமணர்கள் கொடும் திட்டம் தீட்டினர்.

    பாண்டிய வீரர்களின் கட்டுக் காவலை மீறி ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு 
    தீ வைத்தனர் 
    தீய மனதோர்.

    சமணர்கள் வைத்த 
    பெரும் தீ 
    அனல் விழியனின் 
    அருள் புதல்வனை 
    என்ன செய்துவிடும் ?

    எம்பிரானை எண்ணி 
    ஒரு பதிகம் பாடி
    'தீ எய்தவரையே 
    சென்று சேரட்டும்' என கோபம் காட்டினார் ஞாலமும் அறிந்த ஞானசம்பந்தர்.

    அவர் வாக்கு சற்றும் பொய்க்காமல் 
    அப்பெருந்தீ 
    அரசனின் வயிற்றைச் சென்றடைந்தது.

    மன்னன் தீராத 
    வெம்மை 
    நோயில் வீழ்ந்தான். பெரும் நெருப்பு தீண்டிய புழுவாய் துடித்தான்.

     சமணர்கள் சமணத்துறவிகள் தாங்கள் அறிந்திருந்த அனைத்து மருந்துகளையும் மந்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்தனர்.

    வெம்மை
    கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
    கோபம் கொண்டு
    சமணர்களை நோக்கி மன்னன் வீசிய வார்த்தைகள் வெம்மையாய் சுட்டன.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாதரசி மகராசியாரும் முதலமைச்சர் குலச்சிறையாரும் மன்னனிடம் திருஞானசம்பந்தரின் மகத்துவங்களை எடுத்துச்சொல்லி 
    அவரை அழைத்து வர அனுமதி கேட்டனர்.

    சமணமே 
    பெரிதெனக் கருதி 
    அதுகாறும் 
    சமணம் தழுவி 
    அரசாண்டு வந்த மன்னன் 
    வெம்மை நோயைக் கூட தீர்க்க முடியாத 
    பொய் மதம் 
    சமணம் 
    என வெறுத்து ஞானசம்பந்தரைத் தரிசிக்க 
    விருப்பம் தெரிவித்தான்.

    வந்தார் 
    ஆளுடைய பிள்ளை.

    கனிவாய் பார்த்து புன்னகையால் 
    ஆசி கூறி 
    வெண்ணீறைக் கையிலெடுத்து உடலெங்கும் பூசி விட்டார் சிவநாமம் அர்ச்சித்தபடி.

    என்ன மாயமோ அக்கணமே 
    பாண்டியனின் நோய் பறந்தோடிப் போனது.

    மன்னன்
    மனதில் இருந்த அஞ்ஞான இருளும் அகன்று போனது.

    தீரா நோய் 
    தீர்க்கப்பெற்ற அனுபவத்தால் சைவத்தின் 
    பெருமையை உணர்ந்த 
    பாண்டிய மன்னன் அடுத்தகணமே
    சைவம் தரித்தான்.

    ஞானசம்பந்தரின் திருவடிகளில் 
    தன் நெற்றி பதித்து கண்ணீர் வடித்தான்.

    அது நாள் வரை தன்னையும் 
    தன் குடிகளையும் 
    நம்பவைத்து 
    மதம் மாற்றிய சமணர்களுக்குத் 
    தக்க தண்டனை தர முடிவெடுத்தான்.

    அதற்குள்ளாகவே மன்னன்  ஞானசம்பந்தரால்
    குணமான செய்தி பாண்டிய நாடெங்கும் பரவிவிட்டது.

    பயந்துபோன 
    சமணத் துறவிகள் ஞானசம்பந்தரை வம்பிழுக்கும் நோக்கில் வாதப் போருக்கு அழைத்தனர்.

    மூன்று வகை வாதங்களான
    சுர வாதம் 
    அனல் வாதம் 
    புனல் வாதம் 
    அறிவு தெளிய நடந்தேறின.

    முதல் இரண்டு வாதங்களில் 
    தோல்வி கண்ட சமணர்கள் 
    'புனல் வாதத்தில் தோற்றால் வேந்தனே எங்களைக் கழுவேற்றலாம்' என 
    மார் தட்டினர்.

    ஆனால் அதிலும் ஞானசம்பந்தர் 
    வெற்றிக் கொடி நாட்டினார்.

    முதலமைச்சர் குலச்சிறையார் 
    வாதம் புரிந்து தோற்ற 
    சமண குருமார்களையும் ஓடி ஒளிந்த சமணர்களையும் ஒருவரைக் கூட 
    விடாமல் பிடித்து 
    கழுவேற்றினார்.

    அப்படி 
    கழுவேற்றப்பட்டு 
    மாண்ட சமணர்களின் எண்ணிக்கை 
    எட்டாயிரமாம்.

    அதன் பின்னர் 
    பாண்டிய மன்னன் அரசியாருடன் சேர்ந்து குலச்சிறையார் ஆலோசனையுடன் செய்த 
    சிவப் பணிகள் 
    பல்லாயிரம் இருக்கும்.

    அதனால் 
    பாண்டிய நாட்டில் 
    சமணம் பூண்டோடு அழிந்தது.
    சைவம் தழைத்தது.

    'வந்த வேலை 
    இறை விருப்பப்படி முடிந்துவிட்டது'
    எனக் கருதி
    சில நாட்களில் ஞானசம்பந்தர் 
    சோழநாடு புறப்பட்டார்.

    குலச்சிறையாருக்கு ஞானசம்பந்தருடனேயே சோழநாடு சென்று 
    சமயப் பணி தொடர 
    ஆசை மிகுந்தது.

    ஞானசம்பந்தர் 
    புறப்படும் தருணம் வரை 
    அவரது சம்மதத்திற்காக காத்திருந்தார். கண்ணசைவுக்காக
    முகம் பார்த்திருந்தார்.

    ஞானசம்பந்தரோ "இங்கிருந்தபடியே 
    சைவம் தழைக்க 
    சமயப் பணியாற்றுங்கள். சிவநெறி போற்றி இருங்கள்." எனக் கனிவோடு 
    உத்தரவிட்டு விட்டு மகிழ்வோடு விடைபெற்றார்.

    திருஞானசம்பந்தரின் திருவாக்கே
    இறைவாக்கு என உணர்ந்த 
    குலச்சிறையார் பல்லாண்டு 
    சிவப் பணிகள் செய்து ஒரு நன்நாளில் 
    மதுரையம்பதியிலேயே முக்தியடைந்தார்.

    சிவபுரியில் 
    சிவபிரான் அருகில் தேவகணங்களுடன் அவர்களில் ஒருவராய் 
    பேரருளோடு 
    திகழத் தொடங்கினார். இன்றும் 
    அருள் சுரந்து கொண்டிருக்கிறார்.

    குலச்சிறையாரை  'பெருநம்பி' எனப் போற்றுகின்றனர் தாங்கள் அருளிய பதிகங்களில் 
    நம்பியாரூராரும் ஒட்டக்கூத்தரும்.

    இது 
    குலச்சிறையாருக்கு கிடைத்த 
    இறையம்சம் கொண்ட
    நாயனார் விருது.

    நம்பி என்றால் 
    ஆண்களில் மேன்மையானவர் 
    என்று பொருள்.

    'குணம் கொடு 
    பணியுங் குலச்சிறை' எனப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

    'பாண்டிய நாடு முழுதும் சமண இருள் 
    கவிழ்ந்த போது 
    ஆணில் ஒருவரும் பெண்ணில் ஒருத்தியுமே சைவத்தில் நிலைத்து நின்று காத்தவர்கள்.

    ஆணில் 
    குலச்சிறை நாயனார்.
    பெண்ணில் மங்கையர்க்கரசியார் ' என்று நன்றியோடு புகழ்மாலை சூட்டுகிறார்   வாரியார் சுவாமிகள்.

    'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் ' 
    – சுந்தரமூர்த்தி நாயனார்.

  • part 2 of sandeswar nayanar puranam

    -மாரி மைந்தன் சிவராமன்

    விசார சருமரின் 
    மனதில் ஒரு 
    கற்பனைக் காட்சி தினம்தோறும் 
    எழுந்த வண்ணம் இருந்தது.

    அது நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்தது.

    ஒரு நாள் – 
    மண்ணியாற்றங்கரையில் 
    ஓர் அத்திமர நிழலில் மணல் விளையாட்டினூடே
    மண்ணினால் 
    ஒரு சிவலிங்கம் அமைத்தார்.

    சிவத் திருமேனியை
    பாதுகாப்பாக வைக்க  
    மணல் கோபுரம் கட்டினார்.

    நாற்புறமும் 
    வாயில் அமைத்து 
    உள்ளே
    சிவலிங்கத்தை
    வைத்து அழகு பார்த்தார்.

    கோயிலைச் சுற்றி மணலால் மதில் அமைத்தார்.

    விசார சருமர் 
    சிறுபிள்ளை தானே!
    மண் விளையாட்டாக வெண்மணல் 
    கோயிலே கட்டி விட்டார்.

    பலத்த காற்று அடித்தாலோ
    கரையேறி ஆற்றுநீர் வந்தாலே
    மேய்ந்து திரும்பிய பசுக்கள் மிதித்தாலோ  நொடியில் சிதைந்துவிடும் மணற்கோயில்.

    விசார சருமரின் 
    மண் விளையாட்டு விளையாட்டு நாயகனின் மன விளையாட்டுக்கு 
    முன் எம்மாத்திரம் ?

    அஞ்செழுத்தானின் விருப்பப்படி 
    அடுத்த ஆசை 
    விசார சருமருக்கு 
    மனதில் எழுந்தது.

    உடனே 
    ஆற்றுக்குச் சென்று திருமஞ்சன நீர் கொணர்ந்தார்.

    அத்திப்பூக்களையும் 
    பசும் தளிர்களையும் முல்லைப் பூக்களையும் நொடிப் பொழுதில் சேகரித்தார். 

    நீர் ஊற்றி 
    அபிஷேகம் செய்து 
    பூக்கள் தூவி 
    அலங்கரித்து 
    அர்ச்சனை செய்ததைக் கண்ணுற்ற 
    பெருத்த 
    மடி பசுக்கள் 
    விரும்பி வந்து 
    பால் சொரிந்தன பரம்பொருள் மீது.

    அடுத்தடுத்த நாட்களில் பூசைகள் வெகு விமர்சையாயின.

    விசார சருமர் 
    புதிய குடங்கள் வாங்கினார்.

    வற்றாத மண்ணியாறு புனிதநீர் தந்த மாதிரி வள்ளல் பெரும்பசுக்கள் 
    மடிக்காம்பு தொட்டாலே
    பால் மழை பொழிந்தன. 

    வேடிக்கை என்னவெனில் அப்பசுக்கள் 
    மண்ணாலான பசுபதிக்குப் 
    பால் வார்த்த 
    பின்னரும் கூட 
    அந்தணர் வீட்டிலும் அளவுக்கு அதிகமாக 
    பால் தந்தன.

    நன்றாகத்தான் 
    நடந்து கொண்டிருந்தது நீள்சடையானுக்குத் 
    தினப் பூசை.

    ஒருநாள் 
    அவ்வழியே வந்த ஊர்க்காரன் ஒருவன் இதைப் பார்த்தான்.

    விசார சருமர் 
    குடம் குடமாய் 
    பால் கறந்து 
    பாலை மண்ணில் 
    ஊற்றி விளையாடி வீணாக்குவதாக அவனுக்குப் பட்டது.

    வந்த வேகத்தில் அந்தணர்களிடம் ஓடினான்.

    "இடையனைத்
    குற்றம் சொல்லி 
    மாடு மேய்க்க வந்தவன் உங்கள் அனைவரையும் மடையர்களாக்கி விட்டு மண்ணில் கொட்டி பசும்பாலைப்
    பாழாக்குகிறான்!"

    அடித்துச் சொன்னான் ஆத்திரம் பொங்க. வெடித்து போயினர் பசுக்களை வளர்க்கும் மறையோதும் அந்தணர்கள்.

    வந்தவனை விட்டே
    விசார சருமரின் 
    தந்தை எச்சதத்தனை வரவழைத்தனர்.

    "இவன் சொல்வதைக் கேட்டாயா ?

     உன் மகன் 
    எங்களுக்கு மட்டும் 
    மோசடி செய்யவில்லை. சிவபிரானுக்குச் சேரவேண்டிய 
    பாலை வீணடித்து 
    இறைவனுக்கே துரோகம் செய்திருக்கிறான்." 

    கோபம் தலைக்கேற குமுறித் தள்ளினர்.
    தந்தை எச்சத்தனுக்கு
    அவர்களை விட 
    கோபம் மிகுந்தது.

    சொந்த சமூகத்தினர் முன்பு அவமானம் பிடுங்கித்தின்றது.
    நாக்கைப் பிடுங்கிச்
    சாகச் சொன்னது.

    "பெரியவர்களே…. இதுவரை நடந்ததற்காக – – எனக்காக 
    அவனை மன்னியுங்கள்.

    என் குலத்தைச்
    சபித்து விடாதீர்கள்.

    இனிமேல் தவறு நடந்தால் நானே பொறுப்பேற்கிறேன்.

    கடவுளே எங்களைத் தண்டிக்கட்டும்."

    தலை குனிந்தபடி விடைபெற்றார்
    மகனை மோசடிக்காரன் என்று செவிமடுத்ததால் துடிதுடித்த தந்தை.

    அன்றிரவு 
    சிவபூசை சிறந்திருந்த மகிழ்வோடு 
    விசார சருமர் 
    வீடு திரும்பியபோது 
    வீடு அமைதியாக இருந்தது.

    தந்தையும் தாயும் பேசவில்லை. களைத்திருந்த 
    விசார சருமர் 
    காலையில் 
    கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து 
    தூங்கி விட்டார்.

    மறுநாள் காலை பசுக்களுடன் 
    பாலகர் 
    மேய்க்க கிளம்பிவிட்டார்.

    கலங்கிய மனத்துடன் தந்தை எச்சதத்தன் 
    மகன் அறியாமல் 
    பின் தொடர்ந்து 
    மரம் ஒன்றில் ஏறி நடப்பதைக் கவனிக்க தொடங்கினார்.

    விசார சருமரின் மேய்க்கும் பணி 
    மாலை வரை  போற்றும்படி தான் இருந்தது.

    அந்தணர்கள் கேள்விப்பட்டது 
    'பொய்' எனச் சொல்லி 
    எச்சதத்தன்  புறப்பட்டபோது  
    குடமும் பூக்கூடைகளும் எடுத்தபடி விசார சருமர் ஆற்றோரம் போனார்.

    அதிர்ந்த தந்தை 
    அடுத்து நடப்பதை 
    கோபம் வெளிப்பட
    கூர்ந்து
    பார்க்கத் தலைப்பட்டார்.

    ஒரு குடத்தில் 
    மண்ணியாற்று 
    புனிதநீர்.
    மறுகையில் 
    பூக்களும் 
    பசும் தளிர்களும் 
    நிறைந்த பூக்கூடை.

    இரண்டையும் 
    மணற்பரப்பில் வைத்துவிட்டு 
    மணலால் 
    லிங்கம் அமைத்து கோபுரம் கட்டி 
    மதில் அமைத்து காத்திருந்தார் 
    விசார சருமர். 

    கனைத்தபடி வந்த 
    கனத்தமடிப் பசுக்கள் குடங்கள் அருகே சென்று முலை தளர்த்தி 
    பால் பொழிந்தன.

    சில பசுக்கள் 
    விசார சருமரை 
    நாவால் மேவி அழைத்து காம்பு தொடச் செய்து குடம் நிரப்பின.

    பாலாபிஷேகம்
    நீர் அபிஷேகம் செய்து பூவலங்காரம் முடித்து ஐந்தெழுத்தை ஓதியபடி தியானத்தில் ஆழ்ந்தார் விசார சருமர்.

    தந்தை எச்சதத்தனுக்கு எல்லையில்லா கோபம்.

    மகனின் 
    அற்புத பக்தியை 
    அறியாத தந்தை 
    மரம் இறங்கி 
    அருகிலிருந்த 
    கோலை எடுத்தபடி 
    பூசையிலிருந்த 
    மகனருகே வந்தார்.

    உச்சி முதல் 
    உள்ளங்கால் வரை 
    ரத்தம் வேகமெடுக்க கையிலிருந்த கோலால் வேகம் குறையாமல் தடித்த சொற்களுடன் அடிக்க ஆரம்பித்தார் எச்சதத்தன்.

    நிஷ்டையில் இருந்த விசார சருமர் 
    ஒருமித்து இருந்த 
    இறை தவிர எதையும் உணரவில்லை.

    அருகிலிருந்த 
    பசுக்கள் கூட 
    எச்சதத்தனை நோக்கி வேகமாக ஓடி வந்தன முட்டி மோதி விரட்ட.

    தனது பலத்தஅடிகள் எதுவும் மகனுக்கு உறைக்கவில்லை என கோபமுற்ற எச்சதத்தன் என்ன செய்வது
    என்று புரியாது கோபத்தின் விளிம்பில் பால்குடத்தை காலால் எட்டி உதைத்துத் தள்ளினார்.

    இறைவனுக்கான பாலுக்கு 
    இடையில் இடையூறு நேர்வதை உணர்ந்த விசார சருமர் 
    தியானம் நீங்கி கண்விழித்தார்.

    எதிரே தந்தை…!
    உடைத்து இருப்பதோ சிவபூசை…!!
    உதைத்திருப்பதோ பால்குடம்…!!!

    தந்தையே என்றாலும் எல்லோருக்கும் 
    தாயும் தந்தையுமாய் இருக்கிற 
    ஆதிமூலத்தை 
    அவமதித்து விட்டாரே!

    சிவனுக்கான 
    பால் குடத்தை 
    மிதித்து விட்டாரே! 

    விசார சருமருக்கு 
    கோபம் வந்தது.

    'யாராய் இருந்தால் என்ன? சிவ அபராதத்திற்கு யாரும் விலக்கில்லை' என்று நினைத்தவாறு, 
    சிவ தண்டனைக்கு தந்தையாக இருந்தாலும் தப்பி விடக்கூடாது 
    என முடிவெடுத்தார் நொடிப்பொழுதில்.

    கையருகே இருந்த 
    பசு மேய்கும் கோலெடுத்து பால் குடத்தை எட்டி உதைத்த எச்சதத்தன்
    கால்களின் மீது வீசினார்.

    ஆனால் 
    அக்கோலோ
    கோடாரியாக மாறி பிதாவும் குருவும் பிராமணனுமாகிய 
    தந்தை எச்சதத்தனின்  கால்கள் இரண்டையும் துண்டுகள் ஆக்கியது.

    துவண்டு விளைந்த எச்சதத்தன் துடிதுடித்து மாண்டு போனார்.

    அதுசமயம்
    ஒரு பேரொளி எழும்ப பூதகணங்கள் சூழ 
    இடப வாகனத்தில் இறைவன் இறைவியுடன்  அருட்காட்சி தந்தார். 

    "குழந்தாய்….!
     என் பொருட்டு 
    உன் தந்தையின் கால்களை வெட்டி 
    உயிர் பறித்தாய்.

    இனி உனக்குத் 
    தந்தை நானே!

    இனிமேல் 
    நம் பூதகணங்களுக்கு தலைவராக விளங்குவாயாக!

    சிவபுரியின் 
    உயர்ந்த பதவியாகிய 
    'சண்டீசன்' பதவியை உனக்கு அளிக்கிறேன்.

    நீ எனக்கு 
    உணவு படைத்தாய். உடையும் 
    மலர் மாலையும் அணிவித்தாய்.

    என்னை வழிபட்ட 
    நீயும் இம்மாதிரி 
    வழிபடப் படுவாய்.

    இனி நான் 
    உண்பன உடுப்பன 
    சூடுவன அனைத்தும் உனக்கும் ஆகுக!

    அதன் பொருட்டே 'சண்டீசன்' ஆகும் பதவியை உனக்குத் தந்தேன்…"

    என்றபடி ஆரத்தழுவி தனது திருக்கரங்களால் விசார சருமருக்கு  
    தனது கழுத்திலிருந்த 
    கொன்றை மாலையை எடுத்து அணிவித்தார்.

    அனைத்து
    உலகங்களில் உள்ளவரும் 'ஹரஹர' என முழங்க வானவர் பூ மழை பொழிய பல்லாயிரம் கணநாதர்கள் பாடியும் ஆடியும் மகிழ வேதங்கள் துதிக்கப்பட பற்பல வாத்தியங்கள் வாழ்த்திசைக்க
    பரமன் விடைபெற்றார்.

    ஈசனின் ஈடில்லா விளையாட்டால்  சண்டீசன் 
    பதவி பெற்றதால்  தந்தையைக்
    கொன்ற பாபம் 
    விசார சருமருக்குச் சேரவில்லை.

    இறைவனின் சித்தப்படியே 
    பால் குடத்தை 
    எட்டி உதைத்ததால்
    மகனாலேயே கொலையுண்டு போன எச்சதத்தனுக்கும்
    தீங்கேதும் நிகழவில்லை.

    எச்சதத்தனும்
    சிறப்பு பரிசாக 
    அவரது சுற்றத்தாரும் இறையருளால் 
    முக்தி பெற்றனர்.

    இறைவனே வழங்கிய 'சண்டீசன்' பதவி பெற்ற விசார சருமர் 
    சண்டிகேசுவரராக சண்டேசுர நாயனாராக  சிவாலயங்கள் தோறும் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    விசார சருமர் 
    சண்டேசுர நாயனாரானதற்கு 
    சிவநெறியும் சிவபூசையுமே முழுக்காரணம்.

    சண்டேசுர நாயனாரை திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர் 
    ஆகிய 
    சமயக் குரவர் நால்வரும் புகழ்ந்து பாடி 
    துதி செய்தது
    சண்டேசுர நாயனாரின் கீர்த்தியை
    உலகறியச் 
    செய்யவல்லது.

    சண்டி பெருமானுக்கு அடியேன் – சுந்தரர்

    திருச்சிற்றம்பலம்.
     

  • Enadi nadha nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    மறுநாள் 
    ஏனாதி நாதருக்கு 
    ஒரு செய்தி அனுப்பினான்
    அதிவீரன்.

    "எதற்கு 
    அனாவசியப் போர் ?அப்பாவிகள் ஏன் 
    உயிர் விட வேண்டும்??

    நமது இருவருக்கும் 
    தானே பகை ?

    பக்கத் துணை யாருமில்லாமல் 
    போர் செய்வோம்.

    நானும் தனித்து வருகிறேன்.
    நீயும் தனியாளாய் வா.

    ஒத்தைக்கு ஒத்தை பார்த்து விடுவோம் 
    ஒரு கை.

    ஊர் எல்லையில்
    இருக்கும் 
    காட்டுப்பகுதியே 
    சண்டைக் களம்.

    வென்றவர் மட்டுமே 
    வருங்காலத்தில்
    வாட் பயிற்சிக்கு வாத்தியார்"

    என்பதே வந்த ஆள் சொன்னார் 
    போர்முரசின் சாராம்சம்.

    சொன்ன நாளில் 
    குறித்த நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருந்தார் 
    ஏனாதி நாதர்.

    தனியாளாக 
    வருகிறானா…
    இல்லை…
    காட்டில் பலரை முன்னேற்பாடாக 
    ஒளித்து வைத்திருக்கிறானா
    என நினைத்தாரே தவிர ஆயிரம் பேர் வந்தாலும் எதிர் கொள்ளத் 
    தயாராக இருந்தார் ஏனாதிநாதர்.

    அதிசூரனும் 
    அப்படி ஒரு திட்டத்தில் தான் இருந்தான்.

    ஆனால் அதை விட 
    ஒரு பெரும் சூழ்ச்சியின் சூட்சமம் 
    அவனுள் 
    பொறி தட்டியதால்
    அத்திட்டத்தைக் கைவிட்டான்.

    ஏனாதிநாதர் 
    நாற்புறமும் 
    பார்வையைச் சுழற்றியவாறே காத்திருக்க 
    அதிசூரன் 
    ஒரு கையில் வாளுடனும் மறுகையில் கேடயத்துடனும் 
    தனித்தே வந்தான்.

    ஆனால் 
    ஏனோ முகத்தை கேடயத்தால் மறைத்தபடி
    வந்தான்.

    அவனைப் பார்த்த மாத்திரத்தில் 
    ஓ(ம்)வென கத்தியவாறே அவன்மீது
    புலி போல் பாய்ந்தார்  ஏனாதி நாதர்.

    கேடயம் அவன் 
    முகம் விட்டு நழுவியது.

    முகத்தில் திருநீறு. 
    அதுவும் மூன்று கீற்று.

    ஏனாதி நாதருக்குப் போரிடத் தோன்றவில்லை.

    'திருநீறு அணிந்து 
    சிவன் ஆகிவிட்டவனிடம் வாட்போரா…?

    தவறு….  தவறு

    நல்லவேளை வாளை வீசாதிருந்தேன்'

    கேடயத்தையும் கூர்வாளையும் 
    தாழ்வாக்கி 
    அதிசூரனைப் பார்த்து புன்னகைத்தார் ஏனாதிநாதர்.

    திட்டம் பலித்து விட்ட மகிழ்வில் 
    ஏனாதி நாதரை 
    வாள் வீசி 
    கொல்லத் துடித்தான் அதிசூரன்.

    அவன் அப்படி 
    செய்து விடுவானோ என ஏனாதிநாதரும் பயந்தார்.

    ஒரு சிவ வடிவில் இருப்பவருக்கு 
    கொலை செய்த
    பழிபாவம் வந்துவிடுமோ என தான் 
    ஏனாதியார் பயந்தார்.

    சிவ பக்தனுக்குத் 
    தோஷம் வந்துவிடக்கூடாது 
    என்று அஞ்சிய 
    ஏனாதி நாதர் 
    போர் புரிபவர் போல் கொஞ்சம் நடித்தார்.

    சும்மா போரிட்டபடியே 
    அவனிடம் 
    தன் எண்ணம் சொல்லி இனிமேல் அவனே 
    வாள் வித்தை கற்பிக்கட்டும் 
    என்று உறுதி சொல்லி
    வாட் போரை 
    நிறுத்தி விடலாம் 
    என நினைத்தார்.

    ஆனால் ஆத்திரக்காரனுக்குப் 
    புத்தி மட்டு என்பதை உறுதியாக்கும் வகையில்
    ஏனாதி நாதரின்
    நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளாத அதிசூரன் 
    அதிவீரன் போல் 
    ஏனாதி நாதரை 
    வாள் வீசிக் கொன்றான்.

    ஜெயபேரிகை 
    கொட்டிய வண்ணம்
    ஊராரிடம் 
    தம்பட்டம் அடிக்க
    ஊருக்கு விரைந்தான்.

    அப்போது செஞ்சடை மின்னலிட வெளிப்பட்டார் இந் நாடகத்தின் இயக்குனர் 
    சிவபிரான் தேவியோடு.

    "வெண் திருநீறு அணிந்தவரெல்லாம் சிவவடிவம் என 
    எப்பேதமுமின்றி 
    பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருக்கும்
     ஏனாதி நாதரே!

    எனதன்பு 
    ஏனாதி நாத நாயனாரே!

    விழித்திடு. எழுந்திரு."

    ஆண்டவனின் கட்டளையை 
    அப்படியே ஏற்றார் 
    ஏனாதி நாத நாயனார்.

    உயிர் பிழைத்து
    உயிர்ப்போடு எழுந்து 
    தாள்பணிந்து 
    இறை வணங்கி நின்றார்.

    "மெய்யன்பரே…!

     

    வஞ்சகனின் 
    சூதை மீறி 
    திருமண் அணிந்திருந்ததாலே அவனை
    என் போல் பாவித்து கொலை ஏற்று 
    உலகப் பாசம் 
    அறுத்த அருளாளரே…!

    நீர் என்றென்றும் 
    எம்மை விட்டுப் பிரியாத வாழ்வைப் பெறுவாயாக!

    வா….
    சிவபுரி  செல்வோம்."

    என அழைத்தார் 
    சிவபுரித் தலைவர்.

    காட்டிலிருந்த 
    ஓரறிவு முதல்
    ஐந்தறிவு வரையிலான ஜீவிகள் அனைத்தும்
    வியந்து பார்க்க வானிலிருந்து விழுந்த மலர்களை நுகர்ந்தபடி
    விண்ணில் பறந்து மறைந்தார் 
    ஏனாதி நாத நாயனார்.

    'வேடநெறி நில்லார்
    வேடம் பூண்டு 
    என்ன பயன் ?'
    என்ற திருமூலர் வாக்குப்படி
    சிவனடியார் போல் 
    பொய் வேடம் பூண்ட அதிசூரன் 
    ஊர் தூற்ற வாழ்ந்து பின்னரும் நரகத்தில் துன்பமுற்றான் 
    என்கிறார்
    வாரியார் சுவாமிகள்.

    கிபி 660-840 வாக்கில் இயற்பகை நாயனார் இளையான்குடி நாயனார் ஏனாதி நாத நாயனார் வாழ்ந்ததாக ஓர்
    ஆய்வுக் குறிப்பு உள்ளது.

    'ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

    திருச்சிற்றம்பலம்.

    (ஏனாதிநாத நாயனார் புராணம்- முடிவுற்றது)
     

  • Amar needhi nayanar part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    இறையனார் தந்து 
    அமர் நீதி நாயனார் தொலைத்த  
    கோவணப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

    "ஐயன்மீர்….!
    தாங்கள் தந்த 
    கோவணம் காணவில்லை.
    எங்கு எவ்வாறு மறைந்தது நானறியேன்.
    இது என் அறியாப் பிழை. 

    தயைகூர்ந்து மன்னித்தருள வேண்டும்.

    வேறு கோவணம் தருகிறேன்.
    புத்தம் புதிதாய்த் தருகிறேன்.

    ஆடையைக் கிழித்து பிரித்தது அல்ல 
    நான் தரும் கோவணம்.
    பிரத்தியேகமாக கோவணமாகவே நெய்ததைத் தருகிறேன்.

    அடியார்கள் பாராட்டிய வெண்மை மிக்க கோவணம் தருகிறேன்."

    அழுதபடி நின்றார் அமர்நீதியார்.

    சிவனுக்கு 
    சினம் மிகுந்தது.
    கோபம் கொப்பளித்தது.
    அதனால் வார்த்தைகள் அதிரடியாய் தெறித்தன.

    "என்ன நீ…
    ஏதேதோ கதை சொல்கிறாய்.

    நான் தரும்போது 
    பெரும் சிறப்பு கொண்ட கோவணம் என்றதால் வேறொன்று கொடுத்து என்னுடையதைக் 
    கவரப் பார்க்கிறாயா ?

    இதுதான் உன் 
    வணிக லட்சணமா ?

    அமர் நீதியாருக்கு மயக்கமே வந்தது.

    "அந்தணரே… 
    என் பிழையைப் பொறுத்தருள்வீர் ..!! எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.

    பொன் பொருள்
    வைரம் ரத்தினம் 
    பட்டாடை எது வேண்டுமானாலும் கேளுங்கள்.

    தருகிறேன்"

    ஒரு முறை அல்ல, 
    பல முறை கெஞ்சினார்.

    "ரத்தினங்கள் 
    எனக்கு எதற்கு ?
    அவற்றை வைத்து 
    நான் என்ன செய்யப் போகிறேன் ?
    எனக்கு என் கோவணம் தான் வேண்டும்" விடாப்பிடியாய் 
    அடம் பிடித்தார் அந்தணர்.

    இதை கண்ணுற்ற 
    அமர் நீதியார் 
    உற்றார் உறவினர் கண்கலங்கிக் 
    குமுறி அழுதனர்.

    "சரி… சரி….
    வேண்டுமானால்
    இந்த ஈர கோவணத்திற்கு ஈடாக 
    வேறு கோவணம் தா.

    அது இதன் 
    எடைக்கு ஈடாக இருக்கவேண்டும்."
    கொஞ்சம் இறங்கி 
    வந்தார் இறைவனார்.

    ஒரு தராசு 
    கொண்டு வரப்பட 
    அதில் ஒரு தட்டில் தன் ஈரம் உலர்ந்த கோவணத்தை வைத்தார்.

    மறு தட்டில் 
    மனம் கலங்கியபடி தன்னிடமிருந்த உயர்ந்த பட்டுக் கோவணத்தை வைத்தார் அமர் நீதியார்.

    அப்போது அந்தணரின் தட்டு கீழிறங்கி 
    ஈடில்லை 
    எனக் காட்டியது.

    தன்னிடமிருந்த 
    அடுத்த கோவணத்தை தட்டில் வைத்தார்.

    அந்தணரின் தட்டு எழவில்லை.

    துடித்துப் போன 
    அமர் நீதியார்.
    அடுத்து அத்தனை கோவணங்களையும் 
    தன் தட்டில் வைத்தார்.
    அது போதும் அவர் தட்டு  இறங்கவில்லை.

    ஆடைகள் துணிமணிகள் பட்டு பீதாம்பரங்கள் 
    என பலவற்றை வைத்தார். தட்டு தள்ளாடியதே 
    தவிர தரை நோக்கவில்லை.

    'புவனம் எல்லாம் வைத்தால் கூட 
    அந்தணரின் கோவணத்திற்கு ஈடாகாதோ' எனக் கலங்கிய அமர் நீதியார் இறுதியில் அடியாரின் திருவடிகளைப் பிடித்தார்.

    "சுவாமி….!
    இனி என்னிடம் 
    கொடுக்க ஏதும் இல்லை. எல்லாவற்றையும் 
    தந்து விட்டேன்.

    என் மனைவி மகன்
    நான் மட்டுமே பாக்கி."

    அந்தணர் மௌனம் சாதித்தார்
    பொய்க்கோபம் 
    காட்டியபடியே!

    "இதோ அவர்களையும் தருகிறேன்."

    மனைவியும் மகனும் தட்டேறினர் 
    சிவநாமத்தை 
    விடாது ஜெபித்தபடி.

    அதற்கும் பலன் இல்லை. இரு தட்டுகளும் 
    சமமாகவில்லை.

    பொறுமையை இழந்தார் பொன்மனச் செம்மல்
    அமர் நீதி நாயனார். 

    இனி 
    அவர் மட்டுமே மீதி.

    கண்ணிறைந்த இறைவனைத் தொழுதபடி கண்களில் நீரைச் சுரந்தபடி 
    ஐந்தெழுத்தை உச்சரித்தபடி 
    தானும் தட்டு 
    ஏறத் தயாரானார்.

    "இறைவா…!
    அன்பர் துயர் தீர்க்கும் அருளாளா !!

    என் அன்பு உண்மையெனில் 
    என் சிவ சேவை உண்மையெனில் 
    என் அடியார் சேவையில் 
    பிழை நேர வில்லை என்பது உண்மையெனில் என் அடிமைத் திறம் 
    பழுதில்லை என்பது
    உண்மையெனில்
    என் மீதிருக்கும் 
    பழியைத் தீர்த்து வை."

    கண்ணீர் பெருக்கெடுத்து விழி நிரப்பி 
    கரைபுரண்டு ஒட 
    தன் தட்டின் மீது 
    ஏறி நின்றார்
    'சிவாயநம.. சிவாயநம' என்று ஒலித்தபடி.

    என்ன ஆச்சரியம்!
    இரு தட்டுகளும் 
    நேர் நின்றன.

    கவலையோடு
    சூழ்ந்திருந்தத  
    அத்தனை பேரும் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

    அடுத்த ஆச்சரியம் 
    உடனே நிகழ்ந்தது.

    வானிலிருந்து 
    பூமாரி பொழிந்தது.
    தேவர்களின் 
    மறை இசை
    தேவகானமாய்
    நல்லூரில் ஒலித்தது.

    அதற்குப் பின்னரும் மற்றொரு ஆச்சரியம்!

    வம்பிழுக்க வந்து 
    வம்பிழுத்து வந்த 
    சிடு சிடு அந்தணர் 
    திடுதிப்பென 
    மாயமாய் மறைந்தார் அனைவர் கண் எதிரிலேயே!

    அடுத்து நடந்தது அதிசயமே வியக்கும் அதிசயம்!

    அது கணமே 
    இறைவனும் இறைவியும் ஒளிவெள்ளத்தில் 
    ரிஷப வாகனத்தில் ஒருசேரக் காட்சியளித்தனர் வான்வெளியில்.

    மங்கையொருபாகன்  மனம் நெகிழ்ந்து பேசினார்
    அமர் நீதி நாயன்மாரும்
    நல்லூர் மக்களும் 
    ஆச்சரியத்தில் திளைக்கும் படி.

    "அன்பரே….!  
    அமர்நீதியாரே…!
    சிவ சேவை 
    அடியார் சேவை  அன்னதானம் 
    இம்மூன்றும்
    அற்புதமானவை.
    எதற்கும் ஈடிலாதவை.

    எதிர்த்தட்டில்
    நானே நின்றிருந்தாலும் நீயே வென்றிருப்பாய்.

    இறையன்பு 
    இறைவனை விட உயர்ந்தது என்பதை உலகுக்கு அறிவிக்கவே இந்த நாடகம்.

    அமர் நீதியே!
    நீ உன் மனைவியுடனும் மைந்தடனும் என்னுடனேயே 
    சிவபுரம் வாருங்கள்"
    என ஆசிர்வதித்தபடி
    மறைந்தனர் 
    மறை நாயகனும்
    இறை நாயகியும்.

    அடுத்து நடந்தது தான் உலகம் கண்டிராத பேராச்சரியம் !

    தராசு அப்படியே 
    புஷ்பக விமானமாக மாறி
    விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    அமர்நீதியாரும்
    அன்பு மனைவியும் ஆருயிர் மைந்தனும் தேவகணங்கள் வரவேற்க சிவபுரம் அடைந்து சிவானந்தப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.

    நீதியே இவரை 
    விரும்பி வந்ததால் அமர்நீதி என பெயர் பெற்றார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    அமர்தல் என்பதன் பொருள் விரும்புதல் என்பதாம்.

    அமர்நீதியார் புராணத்தை ஊன்றிக் கவனித்தால்
    சில ஆன்மிக உண்மைகளை
    உணர முடியும்.

    ஆண்டவனைக் காண அனைவரும் செல்வர்.
    ஆனால் அடியவரைக் காண அரனாரே வருவார்.

    உள்ளம்கவர் கள்வனாகக் கடவுளைப் பாடுவர்.
    ஆனால் இறைவன் 
    அமர் நீதி  நாயனாரைக்
    கள்வன் ஆக்கினார்.

    இறைவனின் 
    தராசுத் தட்டில்
    ஆண்டவர் அருள் முன்பு அடியார் 
    இறையன்பு தாழும்.
    அன்பு மேலிட மேலிட அருள் தட்டு உயர்ந்து 
    கொண்டே போகும்.

    அன்பு தான் பெரிது. 
    அருள் துணை வரும்.

    இறைவன் 
    உறைவதும்
    ஆனந்த நடனம்
    ஆடுவதும் திருமடம்.
    தவத்திற்கும் தியானத்திற்கும்
    அதுவே சிறப்பிடம்.
    அன்னதானமே
    அங்கு முதலிடம்.

    அமர்நீதி நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தொண்டர் தொகையில்,
    'அல்லிமென் முல்லையந்தார் 
    அமர்நீதிக்கு அடியேன்' என அகமகிழப் பாடுகிறார்.

    அன்பே சிவம்.

    (அமர்நீதி நாயனார் – முடிவுற்றது)