Tag: Nonbu

  • Avvai Nonbu

    தமிழ் மாதங்களில் "ஆடிக்கும், "மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

    பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. சரி ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் அவ்வையார் நோன்பு எவ்வாறு கடைப்பிடிப்பது என்று தெரிந்துக் கொள்வோம்.

    ஆடியில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் தலை குளித்து அம்மனை வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் கூடும். இதுதவிர ஆடி செவ்வாயில் அவ்வையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த அவ்வை நோன்பை கடைப்பிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

    அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் முறை:
    ஆடிச் செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த நோன்பை கடைப்பிடிப்பர். பச்சரி மாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து படைப்பர். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்களில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அதன்பின் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள்.

    பிறகு, அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பத்தியோடு கேட்பர். அதன்பின் ஒரு நீர் நிரப்பிய பாத்திரத்தில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி, தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில், இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.

    இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும், விரதமிருந்தவர்கள் உண்பார்கள். இந்த விரதம் ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு செய்த இடத்தை தூய்மைப்படுத்தி விடுவார்கள். இந்த விரதம் ஒவ்வொரு ஆடி செவ்வாய்க் கிழமைகளில் ஒவ்வொருவரின் வீட்டில் கடைப்பிடிப்பர். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். திருமணம் கைக்கூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய் சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் தீவிரமாக தாக்குகின்றன. இதனால் ஜாதகர் உடல், மன ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தல் அவசியம்.

    அவ்வாறு பலம் பெற்று இருக்கும் ஜாதகர் வாழ்வில் சகல வசதிகளும், அதாவது,சொந்த வீடு, வாசல், சொத்து என்று வசதியாக இருப்பர். செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால், செவ்வாய் தோஷம், வாழ்க்கையில் பிரச்னை, திருமணத் தடை ஆகியவை ஏற்படும். எனவே செவ்வாயின் பலம் வாழ்வில் மிகவும் அவசியம். செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும், துர்க்கையம்மனையும் பூஜித்து வந்தால் செவ்வாய் பலம் பெறும்.

  • Karadayan Nonbu

    மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. 

    இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோம்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. 

    இந்தப் பூஜையை கடைபிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பழம் சாப்பிடலாம். அதிகாலை நீராடி வீட்டை தூய்மையாக அலங்கரித்து பூஜை அறையைச் சுத்தம் செய்யவும். வாசல்களை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கவும். பூஜை அறையில்  காமாட்சி அம்மனையும்,  சுவாமிபடங்களுக்கும் பூ மாலையும்  அணிவிக்க வேண்டும்.  விரதமன்று பால், தயிர் போன்ற பொருள்களை சாப்பிடக்கூடாது. 

    நோன்பு அன்று செய்த அடைகளை சிறிதேனும் மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து பசுவை வலம் வந்து வணங்க வேண்டும்.  பெண்களின் விரதமும் பூஜை வழிபாடும் கணவனது நலனுக்காக  எனும்போது  இந்த காரடையான் விரதம் சிறப்பான பலனை தரும்