Tag: Nellaiappar

  • Nellaiappar koil panguni uthiram kodiyetram

    நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றதுடன் வெகு விமர்சியாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா   கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள்  திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து பங்குனிஉத்திர திருவிழாவிற்கான  கொடிப்பட்டம் பல்லக்கில் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.பின்னர் திருகொடிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற்றது.அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் மேல வாத்தியங்கள் இசைக்க சுவாமி சன்னதி மஹா மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்  கொடியேற்றப்பட்டது .தொடர்ச்சியாக கொடிமரத்துக்கு 21 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் சுவாடேச மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

    கொடியேற்ற விழாவில் திரளாக பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில்  4ஆம் திருநாளன்று சுவாமி நெல்லையப்பர் சுயம்புவாக உருவான வரலாறுத் திருவிளையாடல் நிகழ்வும்  10 ம் திருநாள் அன்று  ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும்  திருவிழாவும்  நடைபெற உள்ளது.
     

  • Nellaiappar aani therottam

    பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.  காந்திமதி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயிலில் ஆனித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனி மாதத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் காட்சியைக் காண வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டு விழா நாளை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 3ம் தேதி தேரோட்டம் நடைபெற வேண்டும். திருவிழாவிற்காக பிரம்மாண்ட தேர்களும் அலங்காரத்திற்கு தயார் செய்யப்பட்டு வந்தன.

    ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆனித் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இந்த சூழ்நிலையில் திருவிழாவை நடத்துவது சரியாக இருக்காது என்று கருதி ஆனிப்பெருந்திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    500 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த தடையும் இன்றி நடைபெற்ற தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்ட பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • Nellaiappar Koil Mulaikattu Vaibavam

    ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பத்தாம்  திருநாளில் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் முளைக்கட்டு வைபவம் நடைபெற்றது. 

    அருள்மிகு சுவாமி  நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 28-ஆம் தேதி மதியம் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  10-ஆம் நாளான சனிக்கிழமை இரவு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.  பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     

  • Nellaiappar koil Car

    தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.

    நெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.

    1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.

    முற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்.

    சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.

    வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.

    தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது.  தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம். 

  • Nellaiappar Car Fest

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம், பக்தர்களின் சிவசிவா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லையில் அமைந்து இருக்கிறது நெல்லையப்பர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    அந்த வகையில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிவசிவா கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் தேர் வடத்தை பிடித்திழுத்தனர். 

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் கண்ணன், தக்கார் சங்கர், நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். தேரோட்டத்தையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.