Tag: Meenatchi Amman

  • Madurai Meenatchi amman theppam

    உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் தைப்பூச தெப்பத்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத் திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

    மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் கோவிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மதுரை தெப்பக்குளம் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.

     இறைவன் இறைவி மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்மன் இன்று காலை எழுந்தருளினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்தது. பின், மீண்டும் முக்தீஸ்வரர் கோயிலில் சேர்த்தியானது. 

    மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியதும், அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வந்தனர். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். 
     

  • Meenatchi Amman Koil Free Laddu

    உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவச லட்டு வழங்கும் திட்டதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்காக  நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை  வருகை தருகின்றனர். அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்து வரும் வழியில் உள்ள கூடல் குமரன் சன்னதி பிரகாரத்தில் வைத்து லட்டு வழங்கப்படுகிறது. .

    தீபாவளி முதல்  லட்டு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி  அறிவித்த நிலையில் லட்டு தயாரிப்பிற்கான சோதனை ஓட்டமும் உட்கட்டமைப்பு பணிகளும் நடைபெறுவதால் தீபாவளிக்கு பின்னர் ஒரு தேதியில் லட்டு வழங்கும் திட்டம் துவங்கும் என பின்னர் அறிவித்தது.
      
    லட்டு தயாரிக்கும் பணி அம்மன் சன்னதிக்கு வலதுபுறம் உள்ள மடப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.   லட்டு தயாரிப்பு பணியில் 15 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். லட்டு தயாரிப்பிற்காக ஒரு பிரத்தியோகமான லட்டு உருட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

    நேர்த்தியான சுவையுடன் 30 கிராம் எடை கொண்ட லட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.நாள்தோறும் 20ஆயிரம் லட்டு தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மீனாட்சியம்மன் கோவில்  நிதியிலிருந்து லட்டு வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பிற்கு ஏற்ப கூடுதலாகள லட்டு தயாரிப்பதற்காண பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Madurai Meenatchi Amman Koil Free Laddu Prasadham

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

    உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 

    இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போன இந்த திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார். 

    மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் அளிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
     

  • Meenatchi Amman Koil Navarathiri

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 29 ஆம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்குவதை அடுத்து கொலு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

    திருவிழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுச்சாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவர் மீனாட்சி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.