Tag: mangalam

  • Mangalam pongul aadi Tuesday

    வாரா வாரம் தான் செவ்வாய் கிழமையும் , வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆனால் ஆடி மற்றும் தை மாதங்களில்  வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?. ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது ஏதோ நேற்று தோன்றிய வழக்கம் இல்லை. காலம் காலமாக நம் முன்னோர் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருள் பெற விரதமிருந்து வருவது வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன் அன்னை பராசக்தியே சிவனை அடையும் நோக்கில் இம்மாதத்தில் தான் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். "ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

     ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது  பெண்களின் நம்பிக்கை.

     மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் இரவு அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி,  மூத்த சுமங்கலி பெண்கள்  வழிகாட்ட, இளம்தலைமுறைப்  பெண்கள் விரதத்தை தொடங்குவர்.

    பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட  ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டையை நைவேத்தியமாக  தயாரிப்பார்கள். மேலும் அன்றைய தினம் செய்யப்படும் நைவேத்தியங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

    அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி செய்யப்படும் பூஜையில் அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை பக்தியுடன் கேட்டு, இறுதியில்  நைவேத்தியமாக செய்த பிரசாதங்களை பெண்களே உண்பார்கள். இதில் ஆண்களை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளைக் கூட   அனுமதிக்க மாட்டார்கள்.  பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவார்கள்.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி , குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும்  நம்பப்படுகிறது.

     இதை தவிர ஆடிச்செவ்வாயில்  துர்க்கை, முருகனுக்கும் பெண்கள்  விரதம் இருப்பதுண்டு. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணியில் இருந்து  4:30 மணிவரை உள்ள ராகு காலத்தில்  அம்பிகையை வழிபடுவது  விசேஷமாகும். 

     இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால்,விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெற முடியும். மாங்கல்யம் நிலைத்து நிற்பதுடன்,  மணமாகாத பெண்கள்  நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும் வழி செய்யும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.  

  • Mangalam tharum masi month

    மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்று போற்றுகிறார்கள். மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. மங்கல வாழ்வு தரும் மாசியின் மகிமைகள் வரிசைகட்டி நிற்கின்றன. 

    மாசி மாதம் மங்கல மாதம் என்றே அழைக்கப்படுகிறது. மாசி மாதம் மந்திர மாதம் என்றும் சொல்வார்கள். எனவே மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது என்கிறார்கள்.  இந்தக் காரணங்களால்தான், உபநயனம் என்கிற பூணூல் கல்யாண வைபவத்தை, மாசி மாதத்தில் நடத்துகின்றனர். மாசி மாதத்தில்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடல் புராணம். 

    முழுமுதற்கடவுளான விநாயகரை, மாசி மாத சங்கடஹர சதுர்த்தியில் விசேஷமாக வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலனைத் தரும். 

    முருகக் கடவுளுக்கும் உகந்தது மாசி மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலை திருத்தலத்தில், தந்தை சிவபெருமானாருக்கு பிரணவ உபதேசம் செய்து ஞானகுரு எனப் பெயரெடுத்தார்.

    மாசி மக நன்னாளில், தேவியை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவது இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். சோகத்தையும் துக்கத்தையும் விரட்டியடிக்கும். 

    மாசி மாத சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மலர்களால் அலங்கரித்து வழிபடுவதால் கல்வியிலும் ஞானத்திலும் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

    காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா விமரிசையாக பல ஆலயங்களில் நடைபெறுகிறது.

    மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது நம்பிக்கை. எனவே இந்த மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம். வாடகை வீடு மாறுவதற்கும் உகந்த உன்னதமான மாதம்

  • mangalam thrum panguni uthiram

    குருவிற்கு சொந்த வீடாக அமைந்த மீனத்தில் சூரியன் பங்குனி மாதத்தில் சஞ்சரிப்பார். ‘உத்ரம்’ நட்சத்திரம் வரும்பொழுது பங்குனி உத்திரம் என்ற பார் போற்றும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு தங்கரதம் ஏறி வரும் முருகப்பெருமானை தரிசித்தால், மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். மன அமைதி கிடைக்கும்.

    வருங்காலம் நலமடையவும் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றலைப் பெறவும் திருமுருகன் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான பங்குனிஉத்திரம் வருகிற 9-4-2017 வருகிறது. ஒரு வீட்டை நிலை நிறுத்துவது மரத்தாலான உத்திரம் தான்.

    இரண்டு தூண்களுக்கு இடையே உத்திரம் அமைப்பர். அதுதான் வீட்டைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறது. அதே போல உத்திரத்தன்று முருகனை வழிபட்டால், தூண் போல நம்மை அவன் தாங்கிப் பிடித்துக் கொள்வான். துயரங்களை துரத்திவிட்டு துணையாக நம்முடன் அவன் இருப்பான்.

    அன்றைய தினம் முருகப்பெருமானை, சர்க்கரையால் அபிஷேகம் செய்து சந்தோஷம் காணுங்கள். இளநீரால் அபிஷேகம் செய்து இனிய வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். காவடி சுமந்தால் கவலைகள் குறையும். பால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்க்கை அமையும்.