Tag: Kunguma

  • Kunguma Panchathi

    குங்கும பஞ்சதசி என்றொரு மந்திரம் உள்ளது. காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில்இதை சிறப்பாக செய்வார்கள். இந்தபஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    குங்கும பஞ்சதசி

    குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
    குங்குமமாவது குடியினைக் காப்பது
    குங்குமமாவது குணமத ளிப்பது
    குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே

    விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
    நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
    பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
    கதிகளை ஆள்வதும் குங்குமமாமே

    தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
    பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
    அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
    காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே

    நற்பதமீவது நாரணீ குங்குமம்
    பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
    சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
    கற்பினைக் காப்பதும் குங்குமமாமே

    செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
    கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
    ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
    காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே

    நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
    பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
    சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
    தாயினை அர்ச்சித்த குங்குமமாமே

    சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
    பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
    முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
    சித்தி தருவதும் குங்குமமாமே

    நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
    செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
    வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
    மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே 

    சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
    சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
    தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
    பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே

    எவையெவை கருதிடின் அவையவை யீவதும்
    நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
    குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
    குவிநிதி யீவதும் குங்குமமாமே

    அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
    இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
    கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
    சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே

    குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
    நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
    எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
    கிட்டவே செய்வதும் குங்குமமாமே

    பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
    விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
    பட்டான பார்வதி பாதம் பணிந்தே
    இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே

    சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
    எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
    நித்தம் தொழும் அன்னை குங்குமம்
    நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே

    மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
    செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
    கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்
    பஞ்ச நிதிதரும் குங்குமமாமே….

  • Padmavathi Thayar Kunguma Archanai

    திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது.  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நாளை  கார்த்திகை பிரமோற்சவம்  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. 

    தொடர்ந்து ஒன்பது நாட்கள் காலை, இரவு என்று 2 வேளையும் பத்மாவதி தாயார் பெரிய சேஷ, சின்ன சேஷம், சிம்மம், கஜ, கருட, முத்துப்பந்தல், கற்பக விருட்சம், உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார். 19 ம் தேதி கோயிலுக்குள் பஞ்சமி தீர்த்தத்துடன்  பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வேதமந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சஹஸ்ரநாமம் பூஜைகளுடன் லட்ச குங்குமார்ச்சனை செய்தனர். 

    இதில் செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, இணை செயல் அலுவலர் பசந்த்குமார், துணை செயல் அலுவலர் ஜான்சிராணி, உதவி செயல் அலுவலர் சுப்பிரமணியம், அர்ச்சகர்கள் பங்கேற்றனர். குங்குமார்ச்சனை நடத்துவதால் வருடாந்திர பிரம்மோற்சவத்தில்  எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்பது ஐதீகம். வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். 

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சத்தின் காரணமாக சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தின் போது எந்தெந்த வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிப்பாரோ அந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார். அதேபோன்று இன்று நடைபெற்ற லட்ச குங்குமார்ச்சனையிலும் ஏற்கனவே பக்தர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இணைய வழியில் லட்ச குங்குமார்ச்சனையில் பங்கேற்று பத்மாவதி தாயாரின் அருள் பெற்றனர்.

    தொடர்ந்து மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடையே பிரமோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. இதில் புண்ணியாகவாசனம், ரக்க்ஷாபந்தனம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடைபெற உள்ளது . நாளை காலை 8 மணியளவில் கொடிமரத்திற்கு அபிஷேகமும் 9.30 மணி முதல் 9.47  மணிக்கு இடையே  தங்க கொடிமரத்தில் பத்மாவதி தாயாரின் பிரமோற்சவ கொடியேற்றமும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் 11 மணிக்கு இடையே பிரமோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக சின்ன சேஷ வாகன சேவை நடைபெற உள்ளது.