Tag: Karaikaal

  • Karaikaal amayar puranam – Part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கைப்பிடித்த காரிகையைக் 
    கடவுள் அம்சம் என உணர்ந்து கொண்ட பரமதத்தன் 
    ஏதேனும் 
    சாக்கு போக்கு சொல்லி புனிதவதியிடமிருந்து அன்றாடம் விலக ஆரம்பித்தான். 

    நீண்டநாள் 
    விலகவும் திட்டமிட்டான். 

    'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழி அவன் நினைவுக்கு வந்தது.

    வணிகத்தைப் பெருக்குவதாக உறவினர்களிடம் சொல்லி பெரும்பொருள் ஈட்டு வர விரும்புவதாக 
    உறுதிபடக் கூறி அவர்களிடம் ஆசி பெற்றான்.

    புனிதவதியார் கூட மறுப்பேதும் சொல்லாமல் கண்ணீரோடும் 
    இனிமேலாவது 
    நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடும் 
    மீறி வந்த விம்மலோடும் அனுப்பிவைத்தார்.

    துறைமுகத்தில் 
    மரக்கலம் தயாராக இருந்தது.

    மனதார 
    குலதெய்வமாய் கருதிய 
    புனிதவதியாரை வணங்கிவிட்டு 
    கடல் வணிகர்கள் வழக்கமாக வணங்கும் வருண பகவானை துதித்து விட்டு 
    கடல் பயணம் மேற்கொண்டான் பரமதத்தன்.

    கணவன் போன 
    திசை வணங்கியபடி காத்திருந்தார் 
    கற்பு நெறியுடன் புனிதவதியார்.

    கணவன் திரும்ப வந்து கை பிடிப்பான்.
    அவன் மனதும் 
    தம்மிருவர் வாழ்வும் மாறும் என்ற 
    பெருத்த நம்பிக்கையோடு
    சிவ வழிபாட்டில் 
    பெருநேரம் கழித்தார்
    பெருமாட்டியார்.

    தினமும் 
    காலையில் கதிரவன் கடலில் எழுந்தான். மாலையில் மறைந்தான். மாலை முடிந்து 
    இரவு வந்தது.
    நிலவு வந்தது. 
    வளர்ந்தது. 
    தேய்ந்தது. 
    மறைந்தது.

    தீதறியா 
    புனிதவதியார் 
    கடலைப் பார்த்தபடி கடவுளைத் தியானத்தபடி கப்பல் வரும் 
    திசை நோக்கிக் காத்திருந்தார்.

    பரமதத்தன் 
    வரவே இல்லை.

    வெகு காலத்திற்குப் பின்-
    பின்னொரு நாள்
    பாண்டிய நாட்டில் பரமதத்தன் வசிப்பதாக காரைக்காலுக்கு 
    ஒரு வணிகத் 
    தகவல் வந்தது.

    ஊர்ஜிதம் செய்யப் போன உறவினர்கள் 
    பெற்ற செய்தி அதிர்ச்சியாய் இருந்தது.

    பெரும் பொருள் ஈட்டி தாயகம் திரும்பிய பரமதத்தன் 
    காரைக்கால் திரும்புவதைத் தவிர்த்து பாண்டிய நாடு சென்றிருக்கிறான்.

    அங்கு 
    வசதியோடு வணிகம் மேற்கொண்ட அவனுக்கு வணிகர் ஒருவர் 
    பெண் தந்து மணம் முடித்திருக்கிறார்.

    அந்த இருமனம் இணைந்த திருமணத்தின் பயனாக 
    ஓர் அழகுக் குழந்தை பிறந்திருக்கிறாள்.

    அக்குழந்தைக்கு பரமதத்தன் இட்ட பெயர் 'புனிதவதி'.

    இத்தகவல்கள் காரைக்காலுக்கு வருவதற்கு முன்னரே உற்றார் உறவினரோடு சிவிகை ஏறி 
    பாண்டிய நாடு சென்று கணவனைக் 
    கைப்பிடித்து 
    அழைத்து வர கிளம்பியிருந்தார் புனிதவதியார்.

    புனிதவதியார் 
    பாண்டியநாடு 
    வரும் தகவல் பரமதத்தனுக்கு முன்னதாகவே
    தெரிய வந்தது. 

    இளம் மனைவியையும் தன் பெண் மகவையும் அழைத்துக்கொண்டு 
    நகர எல்லைக்கு வந்து காத்திருந்தான் 
    பரமதத்தன்.

    புனிதவதியாரைப் பார்த்ததும் மூவரும் வணங்கினர்.

    "உமது அருளாலே தான் இத்தனை நாள் வாழ்கிறேன்.

    இந்த பெண் குழந்தைக்கு உமது பெயரையே வைத்துள்ளேன்.

    தாங்கள் தான் என் குலச்சாமி"

    காலில் விழுந்து கதறினான்.

    கணவன் 
    காலடி விழுந்து கதறுவதைக் கண்டு அஞ்சி பயந்து புனிதவதியார் 
    பூங்கொடி போல் தத்தளித்தார்.

    ஒன்றும் புரியாத சுற்றத்தார் வியந்து பரமதத்தனைப் பார்த்தனர்.

    "ஏன் மனைவியின் 
    காலில் விழுகிறாய் ?" ஆச்சரியத்தோடு கேட்டனர்.

    "இவர் 
    மானிடப் பிறவி அல்ல. தெய்வப் பிறவி. 
    நற்பெரும் தெய்வம். 

    இதை அறிந்து தான் விலகி வந்தேன்.

    என் குழந்தைக்கு 
    இவர் பெயரைத் தான் சூட்டியுள்ளேன்.

    ஆகையால் தான்
    நான் இத்தெய்வத்தின்
    பொற்பாதங்களை வணங்கினேன்.

    நீங்கள் அனைவரும் வணங்குங்கள்.
    நிச்சயம்
    நல்லது நடக்கும்"
    என்று பரமதத்தன் 
    பக்திப் பரவசத்தோடு பகர உறவினர்கள் 
    திகைத்துப் போயினர்.

    பின் 
    நடந்ததையெல்லாம் கதைபோலச் சொன்னான் பரமதத்தன்.

    அதேநேரம் நடந்ததையெல்லாம் கவனித்திருந்த புனிதவதியார் 
    கண்மூடி 
    தியானத்தில் ஆழ்ந்தார்.

    ஈசனிடம் 
    நேரடியாக 
    கோரிக்கை வைத்தார்.

    "தேவாதி தேவனே …! 
    என் கணவருக்கு 
    இப்படி ஓர் எண்ணம் வந்திருக்கிறது.

    எல்லாம் உன் செயல்.

     இத்தனை நாள் அவருக்காகவே
    உடல் வளர்த்தேன். வனப்புடன் இருந்தேன்.

    இப்போது அவரது உள்ளக்கிடக்கை வெளிப்படை 
    ஆகிவிட்டது.
    நானும் பூரணமாகப் புரிந்து கொண்டேன்.

    இனி எதற்கு எனக்கு அழகுக் கோலம் ?
    ஈர்க்கும் வனப்பு 
    எனக்கெதற்கு ? 

    என் 
    தசைகளைச் சுருக்கி 
    உன் 
    பூதகணங்களைப் போல் பேய்கணம் போல் 
    ஆக்கி விடு.

    பூத வடிவை மாற்றி 
    பேய் வடிவு தந்துவிடு."

    உணர்ச்சி பொங்க வேண்டி நின்றார்.

    புனிதவதியாரின் வேண்டுதலை 
    எப்போதும் 
    செவிமடுக்கும் செஞ்சடையன் 
    உடனே 
    திருவருள் புரிந்தார்.

    புனிதவதியார் பெண்மைக்கும் அழகிற்கும் ஆதாரமான ஊன் சதை வனப்பை உதறிவிட்டு வெறும் எலும்புக் கூடாய் 
    பேயாய் மாறி நின்றார்.

    ஆம் ….
    மயிலினம் தன் 
    சிறகுகளை உதிர்ப்பது போல்
    இந்த அழகு மயில்
    சதைகளை தசைகளை உதிர்த்தது.

    இதைக்கண்ட உறவினர் "பேய்' என அலறியவாறே அஞ்சி ஓடினர்.

    ஆனால் 
    பரமதத்தன் 
    மனம் தெளிந்து 
    பயம் விலகி 
    வணங்கி நின்றான்.

    அக்கணம் 
    விண்ணவரும் மண்ணவரும் 
    தோன்றி வணங்கினர்.

    வானம் 
    மலர்மழை பொழிந்தது.

    தேவ துந்துபிகள் தேவகானம் இசைத்தன.

    தேவர்களும் முனிவர்களும் 
    தம்மை மறந்து 
    ஆரவாரம் செய்தனர்.

    சிவகணங்கள் 
    ஆனந்தக் கூத்தாடின.

    இவற்றைக் கவனித்த உறவினர்கள் 
    பயம் நீங்கி 
    புனிதவதியாரைச்
    சூழ்ந்து வணங்கினர்.

    பேய்கணமாய் மாறிய புனிதவதியாருக்கு  இறையருளால் 
    உடல் வனப்பு 
    மாறினாலும் 
    குரல் இனிமையும் 
    தமிழ் புலமையும் 
    குன்றாதிருந்தது.

    கண்மூடிக் கனிந்துருகி "புவியாளும் இறைவா….
    உன்னுடைய அழகான திருவடிகளைப் போற்றும் நல்ல 
    சிவ பூதகணங்களில் ஒன்றானேன்."
    என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு…. 

    அற்புதத் திருவந்தாதியையும் இரட்டை மணிமாலை யையும் 
    பாடி அருளினார்.

    இதனைத் தொடர்ந்தே இறைவன் 
    புனிதவதியார் பிறப்பதற்கு முன்பே இரண்டாவது பெயர் என 
    குறித்து வைத்திருந்த 'காரைக்கால் அம்மையார்' என்ற புனித 
    பெயரைப் பெற்றார்.

    பாண்டிய எல்லையிலிருந்து 
    பேய் வடிவோடு திருக்கயிலாயம் 
    பயணப்பட விருப்பப்பட்டார் காரைக்கால் அம்மையார்.

    வழியில் 
    பார்த்தவர் எல்லாம் பயந்து ஓடினர். 

    காரைக்கால் அம்மை கவலை கொள்ளவில்லை. கயிலை மன்னன் திருநாமத்தை உச்சரித்தபடி 
    பயணம் தொடர்ந்தார்.

    'தன்னை யார் 
    அறிந்தால் என்ன ?
    என்ன பயன் ?
    இறைவன் 
    அறிவானாகில் போதும்' என எண்ணியபடி 
    எதற்கும் கலங்காது 
    பல நாள் பயணத்தில் கயிலாய மலையை அடைந்தார்.

    திருக்கயிலாய மண்ணை காலால் மிதிப்பது தவறு என கருதிய 
    காரைக்கால் அம்மையார் கயிலைநாதனை வேண்டியபடி 
    தலையால் நடக்கலானார்.

    வெள்ளி மலையை தலையால் ஏறினார் சிவன் அருளாலே 
    அவன் தாள் 
    வணங்கியபடியே.

    'திருவருள் 
    துணை செய்தால் தான்  சிவத்தை அடைய முடியும்' என்ற வேதவாக்கு காரைக்கால் அம்மையார் பயணத்தில் உண்மையானது .

    உலகமாதா 
    உமாதேவியார் 
    ஒரு பெண்மணி 
    பேய் வடிவில் 
    தலையால் 
    தம்மை நோக்கி வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு உமையொருபாகனிடம் சுட்டிக் காட்டினார்.

    முக்காலமும் உணர்ந்த
    முக்கண்ணர் புன்னகைத்தபடி

    "வருபவர் நமது அன்பிற்குரியவர். 

    வேண்டி 
    இவ்வுருவம் பெற்றவர்.

    என் அன்பு குழந்தை."
    என்று உமையிடம் சொன்னார்.

    உமாதேவியார் அம்மையாரின் 
    அன்பை வியந்து பாராட்டினார்.

    காரைக்கால் அம்மையார் அருகில் வந்ததும் "அம்மையே…!" என்று அன்போடு அழைத்தார் 
    அடியார்க்கினியர்.

    காரைக்கால் அம்மையார் "அப்பா….!" என கூறியவாறு எம்பெருமானின் 
    தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

    "இங்கு நம்மிடம் வேண்டுவது யாது ?
    நாம்  தரத் 
    தயாராக உள்ளோம்." என்றார் கயிலைப்பெருமான் எல்லை இல்லா கருணையோடு.

    நான்கு வரங்கள் கேட்டார் நற்றமிழ் அன்னையார்.

    "உம்மீது 
    இன்ப அன்பு வேண்டும்.

    என்றென்றும் இறவாத பிறவாமை வேண்டும்.

    மீண்டும் பிறப்பு உண்டேல் உம்மை என்றும் மறவாது இருக்க வேண்டும்.

    நீவீர் ஆனந்த நடனம் ஆடும் போது அடியேன் உன் திருவடியின் கீழ் மகிழ்ந்து பாடிய வண்ணம்  இருக்க வேண்டும்"

    என்று கனிந்துருகி கண்ணீர் மல்கக் கேட்டார் காரைக்கால் அம்மையார்.

    "அம்மையே…! தென்திசையில் பழையனூர் திருவாலங்காட்டில்
    நாம் நடனம் ஆடுவோம்.

    அங்கு 
    நீ சென்று 
    என் நடனம் கண்டு ஆனந்தப்பட்டு 
    எம்மை எப்போதும் பாடிக்கொண்டிரு."
    ஆசி தந்தார் 
    ஆதி சிவனார்.

    அதன்படி 
    திருவாலங்காடு தலத்திற்குத்
    தலையாலே 
    வைராக்கியத்தோடு நடந்து வந்தார்
    காரைக்கால் அம்மையார்.

    ஆங்கு 
    ஆலங்காடு ஆலயத்தில் ஆண்டவனின் 
    நடனக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து 
    தொழுது வணங்கி 'கொங்கை திரங்கி' என்ற முத்திருப்பதிகத்தைப் 
    பாடி மகிழ்ந்தார்.

    திருஞான சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரப் பதிகம் பாடுவதற்கு 
    பல ஆண்டுகளுக்கு முன்னரே 
    'கொங்கை திரங்கி' என்ற திருப்பதிகத்தை தேவாரத்திற்கு தோற்றுவாய் போல் பாடியருளினார் காரைக்கால் அம்மையார் என்று இன்றும் போற்றுகின்றார்
    சைவச் சான்றோர்.

    ஆனந்த கூத்தனின் ஆனந்தக் கூத்தை 
    முன் வணங்கி பெருங்காதல் எழுந்தோங்க பெரிதும் வியப்பெய்தி 
    இத் திருப்பதிகம் 
    பாடி முடித்தார்.

    கூத்தபிரான்
    ஆடும் திருக்கூத்தை சேவடிக்கீழ் என்றும் நீங்காது அமர்ந்து பாடும் வரம் பெற்றதால் இன்றுவரை  இறவாது பாடிய வண்ணமே திருவாலங்காடு தலத்தில் அருட்காட்சி தருகிறார் காரைக்காலம்மையார்.

    சிவபெருமானால் "அம்மையே"
    என அழைக்கப்பட்ட பெருமை வேறு 
    எவருக்கும் இல்லை என்பது 
    காரைக்கால் அம்மையாரின் 
    அருட் சிறப்பு.

    அறுபத்து மூவரில் 
    மூவரே பெண்டிர்.

    இசைஞானியார்.
    மங்கையற்கரசியார்.
    காரைக்கால் அம்மையார் ஆகிய அம்மூவரில்
    இயல் இசையில் வல்லவர் காரைக்கால் அம்மையார் என்பது 
    அம்மையின் தமிழ் சிறப்பு.

    'பேயார்க்கும் அடியேன்..' இது சுந்தரர் வாக்கு .

    அம்மை அடிமலர் வாழ்க !

    (காரைக்கால் அம்மையார் புராணம் -நிறைவுற்றது)

  • Karaikaal ammayar puranam – Part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சோழநாட்டில் 
    ஒளிரும் சங்குகள் ஒதுங்கும் 
    கடற்கரை நகரம் திருக்காரைக்கால்.

    அது ஒரு துறைமுகப்
    பட்டினமும் கூட.  எந்நேரமும் 
    ஏற்றுமதி இறக்குமதி 
    என நகரெங்கும் 
    ஏக பரபரப்பு இருக்கும்.

    காரைக்காலில் 
    அறநெறி தவறாத 
    வாய் நெறி மிக்க சிவநெறி வணிகர் 
    ஒருவர் வாழ்ந்து வந்தார்.

    அவர் தான் 
    அந்நகர 
    வணிகர்களின் தலைவர். பெயர் தனதத்தர்.

    வைசியர் குலத்
    தவப்பயன் காரணமாக அவருக்கு 
    ஒரு செல்ல மகள் பிறந்தாள்.

    அவளுக்கு 
    இறைவன் குறித்து வைத்திருந்த பெயர் இரண்டு.

    முதலாவது பெயர் புனிதவதி.

    குழந்தைப் பருவத்திலேயே 
    சிவபக்தி நிறைந்திருந்தது. 
    வளரும் பருவத்தில் 
    அவள் உச்சரிப்பில் 
    சிவம் நாமமே மிகுந்திருந்தது.

    மலரும் காலத்தில் 
    அழகிற் சிறந்த 
    அழகுக் கொழுந்தாய் மிளிர்ந்தாள்.

    தோழிகளுடன்
    விளையாடும்போது கூட சிவமயமாய் இருந்தாள். 

    தமிழ்ப் புலமையும் 
    தமிழ் இசையும் இறையருளால் 
    இயல்பாய் அவளோடு இணைந்திருந்தது.

    சிவனடியார்களைக் கண்டால் போதும் போட்டது போட்டபடி 
    விட்டு விட்டு 
    வாசலுக்கு ஓடிப்போய் பாதம் பணிந்து 
    வீட்டிற்குள் அழைப்பாள்.

    திருவமுது படைப்பாள். நெஞ்சுருக 
    நஞ்சுண்டவரின் 
    கதை கேட்பாள். கைநிறைய 
    பொன் பொருள் கொடுத்து மனம் நிறைவாள்.

    பருவ வயது 
    நெருங்கி வந்தது.
    உருவம் 
    ஊர் கண்படும்படி சாமுத்திரிகா லட்சணப்படி வனப்புமிகு ஆனது. பேரழகுப் பெட்டக்கமாய் புனிதவதி திகழ்ந்தாள்.

    சிவபெருமான் மீது தணியாத காதல் கொண்டிருந்த 
    புனிதவதிக்கு நாகப்பட்டினம் 
    நிதிபதி என்னும் 
    பெரு வணிகர்  வீட்டிலிருந்து மூதறிவாளர்கள் மூலம் கல்யாண 
    விசாரணை வந்தது.

    நிதிபதியின் மகன் பரமதத்தனே
    மணம் பேச வந்த
    தூதுவர்களின் மனமகன்.

    தனதத்தர் 
    குலம் 
    குடி 
    கோத்திரம் 
    குடும்பம்
    ஜோதிடம் 
    மணமகன் 
    என சகலமும் பார்த்து 
    சரி சொன்னார்.

    பண்டைய காலத்தில் பெண் வீட்டில்தான் திருமணம் என்பது மரபு.

    சீதைக்கும் திரௌபதிக்கும் தமயந்திக்கும் 
    தாய் வீட்டில் தானே திருமணம் நடந்தது !

    தந்தை திதிபதியும் மணமகன் பரமதத்தனும் உறவினர் புடை சூழ காரைக்கால் வந்தனர்.

    சிறப்பான செல்வச் செழிப்பான திருமணம் 
    காரைக்கால் 
    அதுவரை கண்டிராத வகையில் நடந்தேறியது.

    " 'மயில்' போன்ற 
    புனித வதிக்கு 
    'காளை' போன்ற பரமதத்தனுக்கும் ஒத்துவராதே….ஆகாதே ! "
    என்று கணித்த 
    மூத்த ஜோதிடர்களின் மெல்லிய குரல் ஒலிகள் 
    மங்கல வாத்தியத்தாலும் ஊர்மக்கள் வாழ்த்தொலிகளாலும் முற்றிலுமாய் யாருக்கும் கேட்காமல் போனது.

    இல்வாழ்க்கை 
    இனிதே தொடங்கியது.

    தனது ஒரே மகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்ப மனமில்லை 
    தனதத்தருக்கு.

    சம்பந்தி வீட்டோடு கலந்துபேசி அவர்களின் சம்மதத்தோடு 
    தன் வீட்டு அருகே 
    தனி வீடு பார்த்து 
    குடி அமர்த்தினார்.

    பரமதத்தனுக்கு காரைக்காலிலையே பணம் கொட்டும் 
    தொழில் அமைத்தார் மாமனார் தனதத்தர்.

    காதலும் 
    வணிகமும் கைகூட எக்குறையும் இன்றி புனிதவதி -பரமதத்தன் இல்வாழ்க்கை 
    நல் வாழ்க்கையாகத் தொடர்ந்தது.

    சிவபக்தியும் 
    சிவனடியார் சேவையும் கிஞ்சிற்றும் பாதிக்காமல் முன்னைவிட சிறப்பாக செய்து வந்தாள்
    திருமதி புனிதவதி.

    நாடி வந்த சிவனடியார்களுக்கு நவமணிகள் தந்தாள்.
    உயர்ந்த 
    புத்தாடைகள் தந்தாள்.
    வேண்டுவன யாவும் பரிவோடு தந்தாள்.

    கவி பாடும் 
    தமிழ் புலவர்களுக்கு பெரும் பொருள் தந்து பேணிக் காத்து வந்தாள் புண்ணியவதி புனிதவதி.

    இல்லத்தில் 
    கணவன் 
    இல்லாத போதும் திருத்தொண்டர்கள் வராதிருந்த சமயத்திலும் பரம்பொருளின் திருவடிகளைத் தியானித்து 
    பேரன்பின் வெளிப்பாடாய் ஒளிர்ந்தாள் புனிதவதி.

    ஒருநாள் 
    பரமதத்தனிடம் 
    வணிகம் பேச வந்த வணிகன் ஒருவன் 
    இரு மாங்கனிகளை மரியாதை நிமித்தமாக வழங்கி 
    அக்கனிகளின் சுவையை பெருமைப்பட எடுத்துரைத்தான்.

    பரமதத்தன் 
    அவற்றை 
    அன்போடு வாங்கி 
    ஏவலனை அழைத்து வீட்டில் கனிவோடு காத்திருக்கும் கனிமொழியாளிடம் கொடுத்து 
    வரச் சொன்னான்.

    கனிகளை வாங்கிய புனிதவதி 
    கண்ணாளனுடன் 
    மதியம் உண்ணலாம் என பத்திரமாக ஓரிடம் வைத்தாள்.

    அப்போது 
    வாசலிலே 
    ஓர் அழைப்பு.

    சிவமணம் கமழ 
    சிவநாமம் ஒலித்தபடி 
    ஒரு சிவனடியார் நின்றிருந்தார்.

    மகிழ்ச்சியின் உச்சிக்கே போன புனிதவதி வாசலுக்கு விரைந்து சிவனடியார் 
    பாதம் பணிந்து 
    புனித நீரால்
    பாதம் கழுவி 
    வீட்டினுள் 
    அழைத்து வந்தாள்.

    ஆசனம் தந்து அமரச்சொல்லி 
    திருவமுது படைக்க
    உட்புறம்  சென்றாள்.

    வீட்டில் அப்போது 
    அமுது மட்டுமே 
    தயாராக இருந்தது. காய்கறிகள் ஏதும் போதுமானதாய் இல்லை.

    கவலை கொண்ட புனிதவதிக்கு கணவன் கொடுத்தனுப்பிய
    கனிகள் 
    ஞாபகத்திற்கு வந்தன.

    சமாளித்து விடலாம் 
    என துள்ளிக்குதித்து அமுது படைத்து 
    மாங்கனி ஒன்றை 
    நறுக்கி வைத்தாள்.

    வரும்போது 
    தளர்ந்து வந்த சிவனடியார்
    வயிறார உண்டார். மனதார வாழ்த்தினார். ஆசி கூறி 
    விடை பெற்றார்.

    புனிதவதி மனம் 
    நிறைந்து போனாள். அன்றைய 
    சிவ சேவையை 
    எண்ணி 
    பூரித்துப் போனாள்.

    மதிய உணவருந்த 
    'காளை' பரமதத்தன் வீட்டிற்கு வந்தான்.
    'மயில்'  புனிதவதி 
    தோகை விரித்துப் பரிமாறினாள். 

    மீதமிருந்த கனியைக் 
    கணவனுக்குத் தந்து 
    அவன் ருசிப்பதை ரசித்திருந்தாள்.

    "இப்படி ஒரு ருசியா…. தேவ அமுது போல் இருக்கிறதே….!"
    எச்சிலூற திளைத்தவன் இன்னொரு கனியையும் கேட்டான்.

    புனிதவதி 
    துடித்துப் போனாள்.

    'என்ன சொல்வது ?சிவனடியார் வந்த நிகழ்வை சொல்வதா ?அவருக்கு 
    மாங்கனியைத் தந்த கதையைச் சொல்வதா ?

    இரண்டில் ஒன்று தனக்குத்தான் என எண்ணி அவருக்கு கொடுத்து விட்டதாக நியாயப்படுத்துவதா ?

    உண்மையைச் சொல்வதா?
    ஏதேனும் சொல்லி சமாளிக்கலாமா?'

    குழப்பத்துடன் 
    'சரி' என்கிற மாதிரி தலையை 
    அசைத்துக் கொண்டே சமையலறைக்கு ஓடியவள் சதாகாலமும்
    வணங்கும் சங்கரனை வேண்டி நின்றாள்.

    'அடியவர் அல்லல் களையும் அருட்கடலே!' என்ற பக்தையின் 
    குரல் கேட்டு 
    பேரருளாளர் எம்பிரான் மாங்கனி ஒன்றை 
    அவளது இறைஞ்சிய கரங்களில் 
    மந்திரமாய் வைத்தார்.

    கண் திறந்த 
    புனிதவதி 
    கருணைக் கடலுக்கு நன்றி கூறி 
    உணவருந்திக் கொண்டிருந்த கனவனிடம் ஓடி மாங்கனியைத் தந்து முகம் பார்த்து நின்றாள்.

    அக்கனியைச் சுவைத்த கணவன் பரமதத்தன்,

    "புனிதவதி….!

    முதலில் சாப்பிட்ட மாம்பழத்தின் சுவைக்கும் இப்பழத்தின் ருசிக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

    இதுவரை 
    நான் சுவைத்திராத அதிமதுர ருசி….!

     ஆஹா…… என்ன ருசி…!

    இது நிச்சயம் 
    அந்த வணிகன் தந்த மாங்கனி அல்ல….

    சுவை மட்டுமல்ல… கனியின் நிறமும் கூட மாறுபட்டுள்ளது.

    மூவுலகிலும் 
    பெறுதற்கரிய இக்கனியை 
    எங்கிருந்து பெற்றாய் ?
    என்ன விசேஷம் ?
    ஏது நடந்தது ?

    இந்த மாங்கனி 
    ரகசியம் கூறு ?"

    ஊடலுக்காக
    விளையாட்டாகத்தான் கேட்டான்  
    கணவன் பரமதத்தன்.

    புனிதவதிக்குத் தான் வார்த்தைகள் 
    வர மறுத்தன.

    உண்மையைச் சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தத்தளித்தாள் தெய்வமகள்.

    'கட்டிய கணவனிடம் 
    கற்பு ஒழுக்கம் பேணும் பெண் எதையும் மறக்கக்கூடாது'
    மனது கூச்சலிட்டது.

    மாங்கனிக்காக 
    அண்ணன் வினாயகனுக்கும் 
    தம்பி முருகனுக்கும் சண்டை மூட்டி திருவிளையாடல் புரிந்த
    விளையாட்டு நாயகனை மனதினுள் வேண்டி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல்  ஒப்புவித்தாள் 
    கற்பரசி புனிதவதி.

    விளையாட்டாய் 
    கணவன் கேட்டதற்கு விந்தையாய் 
    மனைவி பதிலளித்ததை இப்போது 
    கணவன் ருசிக்கவில்லை.

    "புனிதவதியே…!
    உலகாளும் சிவன் 
    உன் பிரார்த்தனையை கேட்டு
    கனி தந்தார் என்பதை அவன்மீது அதீத
    நம்பிக்கை உள்ள 
    நான் மட்டுமல்ல….
    எவரும் நம்ப மாட்டார்.

    அது 
    உண்மையெனில் 
    எனக்கு இதே போல் 
    ஓர் அதிமதுரக் கனியை ஆதிநாதரிடம் வேண்டி வரவழைத்து தா….

    அப்போது நம்புகிறேன்."

    இயந்திரம் போல் 
    ஆனால் 
    கண்ணீருடன் 
    பூசை அறைக்கு விரைந்தாள் புனிதவதி.

    'உற்றவிடத்து உதவும் பெருமானே ..!' 
    என கண்ணீர் மல்க வேண்டி நின்றாள்.

    'தன்னிகரில்லாதானே..!நான் பொய் 
    உரைக்க வில்லை என்பதை 
    என் கணவரிடத்து உறுதிபட உணர்த்தி
    நம்பிக்கை ஏற்படுத்து'

    கைகூப்பி நின்றாள்.

    கனிந்துருகி
    கேட்பவர் குரலுக்கு ஓடோடி வந்து 
    விரைவில் அருளும் கைலாயன்
    கனி ஒன்றை உடனே மங்கையர்க்கரசியின்
    முன் வைத்து
    மாயமாய் 
    மறைந்து போனார்.

    மாங்கனியுடன் மங்கலகரமாய் 
    தேவதை போல் வரும் புனிதவதியைக் கண்ணுற்ற பரமதத்தன் வியந்துபோனான். பயந்தும் போனான்.

    புனிதவதி 
    பரமன் தந்த 
    புனிதக் கனியை பரமதத்தனிடம் கொடுத்தாள்.

    அனிச்சையாய் அச்சத்தோடு வாங்கியவன் 
    அதை 
    உற்று நோக்குவதற்குள் அந்த மாங்கனி திடுமென மறைந்து போனது.

    பரமதத்தனின் 
    மனோ பயம் 
    இன்னும் அதிகமானது.

    அவனது மனம் 
    பல கிளைகளாக 
    விரிந்து விரிந்து 
    சிந்திக்க சிந்திக்க 
    பல யோசனைகள் 
    வந்து போயின. அத்தனையும் 
    அச்சம் தந்தன.
    அவன் மனம் 
    அதிகம் தடுமாறியது.

    'புனிதவதியார் மானிடப் பிறவி அல்ல…..
    ஒரு தெய்வப்பிறவி.

    கடவுள் போல
    தொழத் தக்கவர்.
    கணவரென
    தொடத் தக்கவரல்ல.

    அவரோடு வாழ்தல் தெய்வக் குற்றம்.

    அவர் தனக்குப் பணிவிடை செய்வது 
    அதைவிடப் பாவம்.'

    பயபக்தி 
    பயத்தையும்
    பக்தியையும் கூட்டியது.

    வீட்டில் இருக்கும் தெய்வத்தை 
    வணங்கக் கூறியது 'அச்சம்'.

    விலகி இருக்க 
    எச்சரித்தது 'மனது'.

    அதுமுதல் 
    புனிதவதியாருக்கும் பரமதத்தனுக்கும் தாம்பத்தியம் 
    இடைவெளி கண்டது.

    பேச்சு குறைந்தது.
    மரியாதை மிகுந்தது.

    இவ்விஷயம் 
    எவருக்கும் தெரியாது ரகசியமாயும் இருந்தது.

    (காரைக்கால் அம்மையார் புராணம்- தொடரும்)
     

  • Karaikaal Manakula Vinayagar

    காரைக்கால் மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    காரைக்காலில் பிரசித்தி பெற்ற  மணக்குள விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. 

    காலை 9 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்று மாலை 4 மணிக்கு முதல்கால பூஜை முடிவடைந்து. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை முடிவடைந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. 

    இதனை தொடர்ந்து காலை 9.45 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களை வாத்தியங்கள் முழங்க  சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலின் கோபுரங்களுக்கு  கொண்டு சென்று வைத்தனர் .      

    அதன்பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர்   மூலஸ்தானத்திற்கான மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது .இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காரைக்கால் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மணக்குள விநாயகரை வழிபட்டனர்.