Tag: Goddess Kanchi Kamakshi

  • The Glories of Goddess Kanchi Kamakshi

    காஞ்சி காமாட்சியை தரிசித்தால் முப்பெரும் தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும். ஆம் காஞ்சியில் அம்பிகை, ஒரே திருவுருவில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும்தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

     வேறெங்கும் இல்லாத வகையில் மூன்று ஸ்வரூபமாக… காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (ஶ்ரீகாமாட்சி) சூட்சுமம் (ஶ்ரீசக்கரம்) ஆகிய நிலைகளில் அருள்கிறாள். ஶ்ரீகாமாட்சி வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம். அம்பாளின் திருமுன் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஶ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

    இதை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள் ளார். இதனால் ஶ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு ஶ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.இந்த ஶ்ரீசக்கரத்தைச் சுற்றி 64 கோடி தேவதைகள் இருக்கிறார்கள். இந்த ஶ்ரீசக்கரம் 9 ஆவரணங்களை அதாவது 9 சுற்றுக்களைக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், சக்தி தேவதைகள் மற்றும் நவ ஸித்தி தேவதைகள் இருப்பதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன.

    பெளர்ணமி தினங்களில் இந்த 9 ஆவரணச் சுற்றுக்கும் தனித்தனியே சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நிறைவுற்றதும் பிந்து ஸ்தானத்தில் அருளும் அன்னை காமாட்சிக்கு ஆராதனைகள் நடை பெறும். இதுவே நவாவரண பூஜை.

    இந்தப் பூஜையில் கலந்து கொண்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்; ஶ்ரீசக்கரத்தை வணங்கினால் நம் தேசத்தில் உள்ள சகல சக்தி வடிவங்களையும் தரிசித்த புண்ணியத்தை அடையலாம் என்பது ஐதிகம்.