கொரோனா பெரும் தொற்று பரவல் அச்சம் காரணமாக இம்மாதம் 11 ம் தேதி திங்கட்கிழமை இரவு முதல் ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன் வழங்கல் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கரோனா பெரும் தொற்றுபரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் பெரும் தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனை ஒட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்களை இம்மாதம் பதினோராம் தேதி இரவு முதல் ரத்து செய்ய இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இலவச தரிசன டோக்கன்களை வாங்குவதற்காக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு தினமும் வருகின்றனர். இதுதவிர திருப்பதியிலும் கரோனா பெரும் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. எனவே கரோனா பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் நடைமுறை இம்மாதம் 11 ஆம் தேதி இரவு முதல் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்குவது பற்றிய அறிவிப்பு நிலைமை சீரான பின் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.