Tag: Celebration

  • Yugadhi Festival celebration

    ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.

  • Deepavali festival celebration

    உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி என்றாலே புத்தாடை அணிவது, இனிப்புக்கள் பகிர்வது, பட்டாசு வெடிப்பது என்பது தான் பலருக்கும் தெரிந்து ஒன்று. ஆனால் தீபாவளி கொண்டாடுவதற்கு என்று சில முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல நமக்கும் தெய்வீக சக்திக்கும் இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்தும் விரத நாளும் கூட தான்.

    தீபாவளி கொண்டாட்டம் என்பது புத்தாடை வாங்குவதில் இருந்து துவங்குகிறது. ஆனால் புத்தாடை வாங்கும் போது முதலில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும் என்பது தான் முறை. அவரும் நம் வீட்டில் ஒருவர் என்ற நெருக்கத்தை அது ஏற்படுத்தும். நம்மை போலவே தீபாவளியன்று கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கும் புத்தாடை அணிவிப்பார்கள். அருகில் உள்ள கோயில்களில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஏற்றது போல் வஸ்திரங்கள் வாங்கி கொடுக்கலாம்.

    நம் வீட்டிற்கு வருபவர்கள், வசதி இல்லாதவர்கள், தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இருப்பவர்கள் என யாருக்காவது நம்மால் முடிந்த அளவிற்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட செய்யலாம். இது போன்று செய்வதால் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு, இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.

    தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அனைவராலும் கங்கையில் போய் நீராட முடியாது என்பதனால் தீபாவளியன்று ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி, மக்களுக்கு ஆசி வழங்குகிறார்கள். அங்கு கங்கா தேவி, வீடுகளில் உள்ள தண்ணீரில் எழுந்தருளுகிறாள். தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சுடுதண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்கிறாள். நல்லெண்ணையில் மகாலட்சுமியும், சீயக்காய் போன்றவற்றில் தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.

    இவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் கையால் நல்லெண்ணைய், சீயக்காய் வைத்து, சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற முறை வைக்கப்பட்டது. இப்படி குளிப்பதால் நம்முடைய பாவங்கள் நீங்கி, கங்கையில் குளித்ததற்கு இணையான புண்ணியம் நம்மை வந்து சேர்வதுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என்ற சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் என்றால் வெறும் பணம், காசும் மட்டும் அல்ல. நல்ல அழகான தோற்றப் பொலிவு, தெளிவு ஆகியவையும் மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும்.

    கங்கை ஸ்நானம் முடிந்த பிறகு புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு போன்ற அனைத்தையும் சுவாமி படத்திற்கு முன் படைத்து, வணங்கிய பிறகு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை என்று தான் அர்த்தம். அதனால் தீபாவளி நாளன்று வீட்டின் பூஜை அறையில் குறைந்தது 5 அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். சிலரது வீட்டில் ஓம் வடிவம், விளக்கு வடிவம் என கோலமிட்டு அதன் மீது, அதன் மீது விளக்குகளை வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு விளக்குகள் ஏற்றி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு, தீபத்தின் ஒளியில் இறைவனை கண்டு வழிபட வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாட்டம் ஆகும்.

  • Tamil New Year Celebration

    வட இந்தியாவில் குப்தர் வம்சத்தை சேர்ந்த 2-வது சந்திர குப்தன் தமது பெயரை விக்கிரமாதித்தன் என மாற்றிக் கொண்டு தமது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்குகிறான். அதனடிப்படையில்தான் விக்கிரமசகம் எனும் 60 ஆண்டு முறை உருவாகிறது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடியும். இந்த 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்.

    உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.

    இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.

    சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
    திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேச்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் உலா புறப்பட்டு, ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.

    ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும். வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம். திருவில்லிப்புதூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில் ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.

    சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப் பகுதிக்கே உரித்தான சித்திரா நதியில் நீராடி விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும் விசேஷமானது.

    இயற்கையின் திருவிளையாடல்
    மாசி-பங்குனி மாதங்களில், மரங்களிலிருந்து இலைகள் அதிகமாக உதிரும். ஆயின், சுக்ல பக்ஷ பிரதமை நாள் நெருங்கும்போதே, புதிய துளிர்கள் துளிர்த்து, மொட்டுகள் அரும்பி, வசந்தத்தின் வண்ண விளையாட்டு, தலைகாட்டத் தொடங்கிவிடும்.

    சாந்த்ரமான யுகாதியைக் கணக்கெடுத்தால், அன்று தொடங்கி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப் பெறும் முதல் விழா வசந்த நவராத்திரியாகும். துர்க்கையை வழிபடும் விழா. இளவேனில் காலத்து விளைச்சல் நன்கமையவேண்டுமென அம்பிகையை பிரார்த்திக்க வேண்டும்.

    இதே வகையில், ஆண்டின் முதல் நாளில் தொடங்கி, ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு ஒருவராக, ஸப்த ரிஷிகளையும் வழிபடவேண்டும்.

  • pongal festival celebration

    தமிழர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்வில் வளம் பெறலாம். அந்த வகையில் நாளை, பொங்கல் படையலிட்டு சூரிய பூஜை செய்வது மிகவும் விசேஷம். சரி பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை தற்போது பார்க்கலாம்…. 

    ஜனவரி 14 – தை 1 வியாழக்கிழமை – தை பொங்கல்

    தை 1 (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சுப தினத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் வருகிறது. 

    பொங்கல் வைக்க எமகண்டம், ராகு காலத்தைத் தவிர்க்கவும்.

    எமகண்டம் : காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

    இராகு காலம் : மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
     

  • Aadi Friday Amman Koil Celebration

    ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. 

    இந்த ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். 

    பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். 

    ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அதேபோல ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. 

    இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இப்படி அனைத்து விசேஷங்களையும் கொண்ட ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்களில் கூட்டம் அலைமோதுகிறது.