Category: ஆன்மீக சுற்றுலா

ஆன்மீக சுற்றுலா

  • அறுபடை முருகன் கோயில்களில் தரிசனம்!

    முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம். நம் எல்லோருக்கும் அறுபடை வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
    ஆனால், நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம். சரியாக திட்டமிட்டால் சீக்கிரமாகவும், சிக்கனமாகவும் அறுபடை வீடு முருக பெருமான் கோயில்களில் தரிசித்து வந்துவிடலாம். மூன்றே நாட்களில் அறுபடை வீடுகளுக்கு பெரும்பாலும் பேருந்துகளிலே செல்ல முடியும்.
    உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களி்ல் ஒவ்வொரு கோயிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரம் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
    ஆறு கோவில்களிலும் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கினால் முருகப் பெருமான் சன்னிதியிலேயே அமர்ந்து ஆராதனையின் போது வழிபடலாம். சிறப்பு தரிசனத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்
    (தரிசன நேரம் : காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை)
    தூத்துக்குடி வந்து அங்கிருந்து பஸ் அல்லது காரில் திருச்செந்தூருக்கு வரலாம். முதலிலேயே இணையதளம் மூலமாக அல்லது தொலைபேசி வாயிலாக தங்கும் அறை பதிவு செய்து விடுவது நேரத்தை மிச்சமாக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கு உள்ள நாழி கிணறு மற்றும் வள்ளிகுகையையும் நேரம் இருந்தால் பார்த்துவிடுங்கள். முதல்முறை வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக குறிப்பிடலாம். திருச்செந்தூரில் தரிசனம் முடிநது 12 மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும். அப்பொழுதுதான் முதல்நாள் மேலும் இரண்டு கோயில்களுக்கு போக முடியும்.

    திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை
    நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை) மதியம் 1 மணியிலிருந்து 4 மணிவரை நடை சாத்தப்படும்)
    (பழமுதிர்சோலை தரிசன நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை)
    இந்த இரண்டு கோவில்களும் மதுரைக்கு அருகில் இருக்கிறது. திருசெந்தூரிலிரிந்து மதுரைக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மதுரைக்குப் போகும் நேரத்தை பொறுத்து இரண்டில் எந்த கோவிலுக்கு முதலில் போகலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பழமுதிர்சோலை மதுரையிலிருந்து 21 கீ. மீ. தொலைவில் உள்ளது. மற்றும் மலை மீது உள்ளதால் கோவிலை ஆறு மணிக்கே நடை சாத்தி விடுவார்கள். அதனால் நான்கு மணிக்கு முன்னரே மதுரைக்கு வந்துவிட்டால் மட்டுமே அங்கு முதலில் செல்லவும்.
    காரிலோ அல்லது பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து போகலாம். மதுரை செல்ல மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் முதலில் திருப்பரங்குன்றம் கோயிலை பார்த்து விடலாம். பஸ்ஸில் 30 நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகிறது. நேரமிருந்தால் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர்மஹால், மற்றும் கடைகளுக்கும் சென்று வரலாம். முதல் நாள் பழமுதிர்சோலை செல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் நாள் காலை முதல் கோயிலாக பழமுதிர்சோலை செல்லவும். மூன்று கோயில்கள் செல்ல வேண்டும் என்பதால் 6 மணிக்கே கோயிலை அடைய முயற்சி செய்யுங்கள்.

    பழனி கோயில்
    (தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
    மதுரையில் இருந்து பழனிக்கு காரில் போகலாம். பஸ்ஸில் செல்வதாக இருந்தால் திண்டுக்கல் போய் அங்கிருந்து போவது எளிது. அங்கு போய்ச்சேர இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகிறது. மலை அடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல படி, வின்ச் மற்றும் ரோப் கார் இருக்கிறது. ரோப்காரில் 5 நிமிடத்தில் சென்று விடலாம். தரிசனம் முடிந்ததும் சீக்கிரம் கீழே வந்து முடிந்தவரை 1 மணிக்கு முன்பாக பழனியிலிருந்து கிளம்பினால் அன்றே சுவாமிமலை பார்த்து விடலாம்.

    சுவாமிமலை
    (தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை)
    பழனியிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினால் சுவாமிமலையை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. ஒரு வேளை தாமதமானால் தஞ்சாவூரிலிருந்து காரில் போவது நல்லது. உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் நிறைய கோயில்களும் கும்பகோணத்தில் பார்ப்பதற்கு இருக்கிறது. கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு பெயர் பெற்றது.

    திருத்தணி
    (தரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
    கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் போய் அங்கிருந்து திருத்தணிக்கு போகலாம். (சென்னைக்கு 6 மணி நேரம் ஆகிறது). சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயில் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. காரில் சென்றால் நேராக கோயிலுக்கே சென்று விடலாம். எப்படியும் மதியம் 1 மணிக்குள் தரிசனம் ஆகிவிடும். அன்றே நீங்கள் ஊர் திரும்பிவிடலாம். நேரமிருந்தால் அங்கிருந்து வேலூர் பக்கத்தில் உள்ள தங்க கோயிலுக்கும் சென்று வரலாம்.
    அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கு வசதியை பொறுத்து கார் அல்லது பஸ்சில் செல்லலாம். உங்கள் வசதிக்கேற்ப இதே வழித்தடத்தில் அல்லது திருத்தணியில் ஆரம்பித்து திருச்செந்தூரில் முடியும் வகையில் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம். ஒரே பயணத்தில் சிக்கனமாவும், சீக்கிரமாகவும் அறுபடை வீடு முருகன் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக எனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • இயற்கையை நேசிப்பவர்களுக்கு தலகோனா சிவன்…

    தலகோனா, மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் உள்ளது இந்த தலகோனா மலை. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் பக்தியுடன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு மட்டுமல்ல ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும் ஏற்றது. திருப்பதியில் இருந்து காரில் சென்றால் எளிதாக சென்றடைய முடியும். இங்கு “அதர்மம்”, “காதல் கொண்டேன்” மற்றும் சில திரைப்படங்களின் படங்களும் எடுக்கப்பட்டதாம். தலகோனா நுழையும் முன் செக்போஸ்டில் உங்கள் வாகனங்களை அலசி ஆராய்ந்த பின்னர் தான் உள்ள அனுமதிக்கிறார்கள். காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டு, திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர், பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி. செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருக்கும். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்கும். சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருக்கும். வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் செல்லலாம். மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருக்கும இந்த நீர் வீழ்ச்சி. வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது – வேறெந்த பாறையையும் தொடாமல்! தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது – மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது!

  • சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா

    சதுரகிரி தல வரலாறு :
    சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் 0/கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

    வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

    சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

    சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

    இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
    இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும்.

    இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
    கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

    இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.


    இரட்டை லிங்கம்:
    ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

    “”சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

    பிலாவடி கருப்பு:
    வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
    வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

    பெரிய மகாலிங்கம்:
    நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்’ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    தவசிப்பாறை:
    மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது.
    தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது.

    உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்’ என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

    சுந்தரமூர்த்தி
    கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’ என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்’ எனப்படுகிறது. அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

    பார்வதி பூஜித்த லிங்கம் :
    சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

    பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
    இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

    லிங்க வடிவ அம்பிகை
    சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

    சதுரகிரியில் தீர்த்தங்கள்
    சந்திர தீர்த்தம்
    சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

    கெளண்டின்னிய தீர்த்தம்.
    சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

    கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு.

    சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
    இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

    இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
    இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.

    காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்’ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித்

    தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
    மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
    பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

    அபூர்வ மூலிகைகள் :
    இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
    பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.

    இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
    தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

    இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
    விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
    சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
    இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
    அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு.
    இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
    சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
    இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
    மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

    உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

    சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா
    சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
    சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
    இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
    சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

    நோய் தீர்க்கும் மலை:
    சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
    திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்
    தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
    மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.
    சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

    ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
    பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
    இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
    மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.
    சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
    ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
    சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

    இருப்பிடம்:
    மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
    அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
    அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

    திறக்கும் நேரம்:
    காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
    மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

  • அப்பர், சுந்தரர், சம்பந்தரால் பாடல்பெற்ற திருப்பாசூர் சிவன் கோயில்…

    அசுரர்களான மது கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்க மூங்கில்கள் அடங்கிய வனத்தில் சிவபெருமானைப் பூஜிக்கிறார். அவருக்கு அருள் பாலிக்க மூங்கில்களுக்கிடையே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளுகிறார். பாசூர் என்றால் மூங்கில்.
     
    மூங்கில்களுக்கு இடையே தோன்றியதால் பாசூர் நாதர் என்று போற்றப்படுகிறார். இந்தத் தலமும் திருப்பாசூர் என்று வழங்கப்படுகிறது. இறைவனுக்கு வாசீஸ்வரர் என்கிற பெயரும் உண்டு. இவ்வழியே செல்லும்போது, மூங்கில்களுக்கிடையே இருக்கும் சிவலிங்கத்தைக் கண்ட கரிகாலச் சோழன் இக்கோவிலை எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.
     
    சோழன் கரிகால் பெருவளத்தானின் சிற்றரசராக இருந்த குறும்பன் என்பவர் கப்பம் கட்ட மறுக்க, இறைவன் நந்தீஸ்வரரை அனுப்பி குறும்பனுக்கு உதவியாக இருந்த காளிக்குப் பொன் விலங்கிட்டு அழைத்து வந்து கப்பம் கட்டச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த தலம் என்று தலபுராணம் கூருகிறது. சோழர் கால கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன. சுவாமி சன்னிதியின் வலப்புறம் அம்மன் சன்னிதி இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இவ்வாறு இருப்பது ஆக்கும் சக்தியை அளிக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
     
    இறைவி தங்காதளி அம்மன். இரு சன்னிதிகளும் தனித்தனி விமானங்களுடன் அமைந்துள்ளன. சொர்ணகாளிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளே இங்கு இறைவனைப் பூஜை செய்துள்ளதால், முதல் பூஜை அம்பாளுக்கு நடைபெறுகிறது. கருவறை வாயிலில் இடப்புறம் 11 விநாயகர் மூர்த்தங்களுடன் ஏகாதச விநாயகர் சபை நம்கண்களைக் கவர்ந்திழுக்கிறது.
     
    அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்றத் திருத்தலமாகும் இது. திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில், சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கடம்பத்தூருக்குப் பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது இத்தலம்.
  • திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா….

    தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் சகல வசதியும் நிறைந்த திருமலை திருப்பதி கோயிலுக்கு வரு வோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகை யில் வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.


    திருமலையில் தரிசன முறைகள் :

    திருமலையில் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், சுதர்ஸன தரிசனம் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் ஆகிய தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. இது தவிர கட்டண சேவை முறையும் உண்டு.

    திவ்ய தரிசனம்:

    இது திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனமாகும். இதில் திருப்பதியிலிருந்து அலி பிரி வழியாகவும், சீனிவாச மங்காபுரத்திலுள்ள ஸ்ரீ வாரி படிக்கட் டுகள் என இரண்டு வழியாகவும் செல்லலாம்.
    அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டிற்கு செல்வத ற்கான சீட்டு வழங்கப்படும். அதனை எடுத்துச்சென்று திருமலை யில் நடந்து வரும் பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழி படலாம்.

    இலவச தரிசனம்:

    திருமலையில் கட்டணம் ஏதும் இல்லாமல் பக்தர்கள் வைகுண்டம் 1 வழியாக இலவசமாக தரிசிக்கும் முறை யாகும். இதில் பக்தர்கள் உள்ளே சென்ற உடன் அவர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும். இதில் தரிசன நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. இந்த அட்டையை கொ ண்டு பக்தர்கள் காத்திருக்காமல் அதில் குறித்த நேரத்திற்கு வந் தால் போதுமானது.

    சுதர்ஸன தரிசனம்:

    இந்த தரிசனம் ரூ. 50 செலுத்திச் செல்லும் தரிசனமாகும். இது திருப்பதி மற்றும் எல்லா நகரங்களிலுள்ள திருமலை திருப்பதி தகவல் மையங்களிலும் விவரங்களை அளித்து பெற்றுக்கொள்ளலாம். இதில் தரிசனத்திற்குச் செல்வதற்கான நேரம் குறிக்கப்பட்டிரு ப்பதால், அந்த நேரத்தில் சென்று வழிபடலாம்.

    சிறப்பு நுழைவு தரிசனம்:

    இது ரூ. 300 செலுத்தி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து தரிசிக்கும் முறை. இதில் விரைவாக சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.
    இது தவிர மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கோயி லின் எதிரே உள்ள வரிசையில் காத்திருந்தால், கோயில் ஊழியர்களால் மகா துவாரம் வழியாக வழிபாட்டிற்காக அழை த்துச் செல்லப்படுவர். இந்த முறை நாளொன்றுக்கு 4 முறை அனுமதி க்கப்படும். மேலும் 1 வருட கைக் குழந்தையை எடுத்து வரும் பெற்றோர் கோயிலின் அருகே உள்ள சுபதம் நுழைவாயில் வரிசையில் அனுமதிக்கப்படுவர்.

    இது தவிர சில கட்டண சேவைகள் உள்ளன. இதில் கலந்து கொள் ள விரும்புவோர் திருமலையில் உள்ள விஜயா வங்கியில் சென்று கைரேகை மற்றும் அடையாள அட்டையைக் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம். இது குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங் கப்படும்.
    மேற்கண்ட வழி முறைகளை பின் பற்றி திருமலையில் ஏழு மலையானை பக்தர்கள் வழிபடலாம். இதில் எந்த முறையில் சென்று வழிபட்டாலும் அவர்களுக்கு புகழ்பெற்ற பிரசாதமான லட்டுகள் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்படும்.

    திருவேங்கடமலையானை தரிசிக்க எளிதாக்க இதோ சில குறிப்புக்கள்:

    திருமலையை மேல் திருப்பதி என்றும் திருப்பதியை கீழ் திருப்பதி என்றும் அழைப்பார்கள். திருமலை திருப்பதிக்கு ஒருநாளைக்கு 50,000 முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்குமேல் வருகை புரிகிறார்கள்.
    திருமலைக்கு செல்லும் முன்பே ரயில் மற்றும் பேருந்து டிக்கட்டுகள், தங்கும் வசதிகள் மற்றும் சேவை டிக்கட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
    தங்கும் வசதிக்காக உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சி.ஆர்.ஓ அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நபர் மட்டும் க்யூவில் காத்திருக்கலாம். மற்றவர்கள் சி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு பக்கத்தில் உள்ள பயணிகள் தங்குமிடத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம். அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.
    தகவல்களை அறிந்துகொள்ள, ரயில்நிலையம், விமான நிலையம், ஆர்.டி.சி. பேருந்து நிலையம், அலிபிரி பேருந்து நிலையம், சத்திரங்கள், அலிபிரி டோல்கேட், மற்றும் ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் உள்ள தகவல் மையங்களை அணுகலாம்.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் , மலைப்பாதையில் பழுதடையும் வாகனங்களை சரிபார்ப்பதற்கு ரோந்து பழுதுபார்ப்பு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
    திருமலைக்கு நடந்து செல்பவர்களுக்கு வசதியாக திருப்பதி ரயில்நிலையத்திலிருந்து அலிபிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    நடந்து செல்லும் யாத்திரிகர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி அடிவாரத்தில் உள்ள கௌண்டரில் செலுத்திவிட்டு மலை ஏறிச்சென்று திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
    திருமலை யாத்திரையை பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் இல்லாமல், வார நாட்களில் பயணம் இருப்பது போல் திட்டமிட்டுக்கொண்டால், எளிதாக சுவாமி தரிசனம் செய்து, பயணத்தை இனிதானதாக ஆக்கலாம்.
    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
    திருமலையில் அறைவசதி கிடைக்காவிட்டாலும், நாம் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான இலவச லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் நமது பொருட்களை வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யலாம்.
    கீழ்த்திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருட்களை வைத்து விட்டு, அலர்மேலு மங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாளை தரிசித்து விட்டு, மேல் திருப்பதியில், சுவாமி வெங்கடாசலபதியை வழிபடுவதற்கு முன், சுவாமி புஷ்கர்ணி தீர்த்தத்தில் புனித நீராடி வராகப் பெருமாளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
    திருமலை யாத்திரையின்போது அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ உடன் எடுத்துச்செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் கேட்கக் கூடாது. முன்பின் அறியாதவர்களை உங்கள் அறையிலும் தங்க வைக்கக்கூடாது.
    கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்குத் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்பு கொள்வது அல்லது http://www.tirumala.org/ இணையதளத்தின் வழியாக அறியலாம்.

    பார்த்து ரசிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்

    பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.
    ஆன்மீக அம்சங்களை தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. ஷிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.
    திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும் பக்தர்களும் நன்கு அறிந்ததே. ஆந்திர மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவுவகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம்.

    மேலும், இங்கு உள்ளூர் தயாரிப்புகளாக பலவகை கைவினைப்பொருட்கள், மரக்குடைவு பொருட்கள், மரப்பொம்மைகள், கலம்காரி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் சந்தன பொம்மைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. ரசனை மிக்கவர்கள் இவற்றில் ஏதாவதொன்றை வாங்காமல் ஊர் திரும்புவதில்லை.

    பயண வசதிகளும் பருவநிலையும்:

    திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிதாகவே உள்ளது. நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ரேணிகுண்டாவில் திருப்பதிக்கான உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.
    டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து இந்த விமானநிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. தற்போது இதனை வெளிநாட்டு சேவைகளை இயக்குவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
    மேலும், முக்கிய போக்குவரத்து வசதியாக திருப்பதியில் பிரத்யேக ரயில் நிலையமும் உள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கு இணைப்புகள் உள்ளன.
    அது மட்டுமல்லாமல் பெங்களூர், ஹைதராபாத், வைசாக் மற்றும் அருகிலுள்ள சென்னை நகரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் அடிக்கடி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.
    ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பதி நகரின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் இதர அம்சங்களை சுற்றிப்பார்க்க வாடகைக்கார்கள் மற்றும் உள்ளூர் தேவஸ்தான பேருந்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நாள் வாடகைக்கும் டாக்சிகளை பயணிகள் அமர்த்திக்கொள்ளலாம்.

  • மனநோய்கள் தீர்க்கும் திருமுருகன் பூண்டி…

    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் கோவை மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று.
    கோவை மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும்.

    இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது.
    இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.
    மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

    வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.